இலங்கைபிரதான செய்திகள்
Trending

அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் போத்தல் கொள்வனவுக்கு தடை: புதிய சுற்றறிக்கை வெளியீடு

அனைத்து அரச நிறுவனங்களிலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களைக் கொள்வனவு செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் மே 31ஆம் திகதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொதுநிருவாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

அனைத்து அரச நிறுவனத் தலைவர்களுக்கும் மாக விடுக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2023.07.19 திகதியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அரச நிறுவனங்களுக்குள் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்கு நிறுவனத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுற்றுச்சூழல் அமைச்சின் இணக்கப்பாட்டுடன் இந்தச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதோடு, பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதே இதன் பிரதான நோக்கமாகும்.

இதற்கமைய, ஏற்கனவே அமுலில் உள்ள விதிமுறைகளின்படி, 2023 ஒக்டோபர் 01 முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் உணவுப் பொதிகள், தட்டுகள், கோப்பைகள், கரண்டிகள், கத்திகள், பூமாலைகள் மற்றும் இடியாப்பத் தட்டுகள் போன்றவற்றை உற்பத்தி செய்வதோ அல்லது விற்பனை செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்துடன், அரசியல், சமூக, மத மற்றும் கலாசார நிகழ்வுகளின் அலங்காரங்களுக்காக அனைத்து வகையான பொலித்தீன் மற்றும் பொலிப்ரோப்பிலீன் தயாரிப்புகளைப் பயன்படுத்துவதும் தடைசெய்யப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பொருட்களை முறையற்ற விதத்தில் அகற்றுவதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன், விலங்குகள் அவற்றை உட்கொள்வதால் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், மைக்ரோ பிளாஸ்டிக் மனித உடலுக்குள் செல்வதால் பாரதூரமான சுகாதாரப் பாதிப்புகள் உருவா கின்றன.

திறந்த வெளியில் இவற்றை எரிப்பதால் வெளியேறும் நச்சு வாயுக்களும் மனிதர்களுக்கு உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, வரவிருக்கும் வெசாக் பண்டிகைக்கான அலங்காரங்கள் மற்றும் தன்சல்களின் போது பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்குமாறு மத்திய சுற்றாடல் அதிகாரசபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது என்றுள்ளது.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker