இலங்கை
Trending

நிதி அல்ல, எமக்கு நீதியே முதன்மையானது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான போராட்டத்தில் மரணிக்கவும் தயார் அம்பாறையில் செல்வராணி காரசாரம்; எம்.பி. கோடிஸ்வரனும் பங்கேற்பு

பாறுக் ஷிஹான்

எமது உறவுகளை இழந்து தவிக்கும் எங்களுக்கு நிதி உதவி தேவை தான். ஆனால், அதைவிட எமக்கு நீதியே மிக முக்கியமானது! நீதி கிடைப்பதே எமது முதன்மை இலக்கு. நீதி கிடைத்த பின்னரே நாங்கள் நிதியைப் பற்றிச் சிந்திப்போம்” என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பகுதியில் இன்று (26) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்;

“ஒரு சரியான தீர்வை நோக்கியே நாங்கள் தொடர்ச்சியாகப் போராடிக் கொண்டிருக்கிறோம். நீதி என்பது கடையில் கொடுத்து வாங்கும் பொருள் அல்ல. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் எமக்கு வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்களும் நிதித் தேவைகளும் இருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால், நீதிக்கு முன்னால் அந்த நிதி எமக்கு பெரிதல்ல. இலங்கை அரசாங்கமானது எங்களை எவ்வாறாவது தங்களது உள்நாட்டு பொறிமுறைக்குள் தள்ளி, வழக்கை முடிக்கப் பார்க்கிறது.

உலகளவில் பல்வேறு நாடுகளிலும் பல போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. சில நாடுகளுக்கு 30, 40 வருடங்களுக்குப் பிறகே தீர்வுகள் கிடைத்துள்ளன. நாங்களும் கடந்த 17 வருடங்களுக்கும் மேலாக நீதிக்காகப் போராடி வருகின்றோம். எமது இலக்கை அடைய 15 முதல் 17 வருடங்கள் வரை ஆகலாம். ஆனால், எனது உறவுகளுக்கு நீதி கிடைக்கும் என்றால் நான் செத்தாவது நீதியைப் பெற்றுத் தருவேன்.

இன்று செம்மணியில் 650-க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. எமது உறவுகளை காணாமல் ஆக்கியது இந்த இலங்கை அரசுதான். தற்போதைய அநுர குமார திசாநாயக்கவின் அரசாங்கம் கூட ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பல வாக்குறுதிகளை வழங்கியது. ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அந்த வலி எமக்குத் தெரியும்; நீதியைப் பெற்றுத் தருவோம்’ என்றார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர் ‘எனது இராணுவத்தினரை என்னால் காட்டிக் கொடுக்க முடியாது’ என்று ஜனாதிபதி கூறிவிட்டார்.” என அவர் தனது ஆதங்கத்தை வெளியிட்டார்.

இதன்போது, எதிர்வரும் ஆகஸ்ட் 30 ஆம் திகதி ‘சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தை’ முன்னிட்டு, வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தால் முன்னெடுக்கப்படவுள்ள விசேட மாநாடு தொடர்பிலும் ஊடகங்களுக்குத் தெளிவூட்டப்பட்டது.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அம்பாறை மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி) பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டு தனது ஆதரவுக் கருத்துக்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker