இலங்கைபிரதான செய்திகள்
Trending

அரச ஓய்வூதியம் இல்லாதவர்களும் ஓய்வூதியம் பெறுவதற்கான வழிமுறை..

18 முதல் 59 வயதிற்கு இடைப்பட்ட, அரச ஓய்வூதிய உரிமையைப் பெறாத நபர்களுக்காக ‘சுரக்கும’ ஓய்வூதியத் திட்டம் தொடர்ந்து திறந்தே இருக்கும் என்று இலங்கை சமூக பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அச்சபை, உறுப்பினர்களின் தேவை மற்றும் பங்களிப்புப் பணத்தைச் செலுத்தும் திறனின் அடிப்படையில், தங்களுக்கு விருப்பமான ஓய்வூதியத் தொகையைத் தாங்களே தீர்மானித்துக் கொள்ள முடியும் என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த ஓய்வூதியத் திட்டங்களின் கீழ் பல்வேறு விசேட சலுகைகள் கிடைக்கப் பெறவுள்ளன.

அதன்படி, 60 வயது பூர்த்தியடைந்தது முதல் ஆயுட்காலம் வரை ஒப்புக்கொள்ளப்பட்ட 50,000 ரூபா மாதாந்த ஓய்வூதியம் வழங்கப்படும் என்று இலங்கை சமூக பாதுகாப்பு சபை தெரிவிக்கிறது.

தவணைக்கட்டணங்களைச் செலுத்தத் தவறினாலும், கணக்கின் மீதமுள்ள தொகைக்கு ஏற்ப சரிசெய்யப்பட்ட ஓய்வூதியம் வழங்கப்படும்.

ஓய்வூதியம் பெறுபவர் மரணமடைந்தால், அவரது துணைவருக்கு/சார்புடையவருக்கு அந்த உறுப்பினரின் 80 வயது வரையிலான காலப்பகுதிக்கு ஓய்வூதியம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியம் பெறுவதற்கு முன்னர் மரணம் சம்பவித்தால், இறுதிச்சடங்கு செலவுகளுக்காக 100,000 ரூபாவுடன், அவரது துணைவருக்கு ஓய்வூதிய உரிமை அல்லது செலுத்தப்பட்ட தொகையை முதலீட்டு வருவாயுடன் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

விபத்து அல்லது நோய் காரணமாக முழுமையான ஊனமுறும் உறுப்பினர்களுக்கு 500,000 ரூபா பணிக்கொடையுடன், ஊனம் ஏற்பட்ட நாள் முதல் ஆயுட்காலம் வரை ஒப்புக்கொள்ளப்பட்ட ஓய்வூதியம் வழங்கப்படும். அத்தகைய சூழ்நிலையில், உறுப்பினர் எதிர்கால தவணைக்கட்டணங்களைச் செலுத்துவதில் இருந்து முற்றிலும் விடுவிக்கப்படுவார்.

அதேபோல், நிரந்தர பகுதி ஊனத்தின் போது 100,000 ரூபா பணிக்கொடை வழங்கப்படும் என்றும் இலங்கை சமூக பாதுகாப்பு சபை அறிவித்துள்ளது. அத்துடன், பயனாளியின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் அல்லது ஏதேனும் தேவைகளுக்கான நிதி உதவியையும் பெற்றுக்கொள்ள முடியும்.

இதற்கமைய, 18 வயது முதல் 29 வயதுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மாதாந்தம், வருடாந்தம் அல்லது ஒரே தடவையில் செலுத்தும் தொகையாகத் தேவைக்கு ஏற்ப இச்சலுகைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

‘சுரக்கும’ ஓய்வூதியத் திட்டத்திற்கான பணத்தைச் செலுத்தும் பணிகளை 20 வயது முதல் 45 வயதுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மேற்கொள்ள முடியும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தவணைக்கட்டணச் செலுத்துகை வாய்ப்புகளுக்கு மேலதிகமாக காலாண்டு, வருடாந்தம் மற்றும் இரண்டு முதல் நான்கு ஆண்டுகள் வரையிலான குறுகிய காலப்பகுதிகளுக்குள் நெகிழ்வுத்தன்மையுடன் தவணைக்கட்டண முறைகளைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பும் உள்ளது என்று இலங்கை சமூக பாதுகாப்பு சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களை 011 2 88 60 88 என்ற தொலைபேசி இலக்கம் மூலமும், 077 1 44 30 44 என்ற வாட்ஸ்அப் (WhatsApp) இலக்கம் மூலமும் பெற்றுக்கொள்ள முடியும்.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker