கல்முனை இஸ்லாமாபாத்தில் அம்பாறை மாவட்ட பிரதான “அத்தம” தேசிய தூய்மைத் தின நிகழ்வு!

பாறுக் ஷிஹான்
“கிளீன் சிறிலங்கா” (Clean Sri Lanka) தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், தூய்மையான நாட்டிற்கான தேசிய மக்கள் பணியாக முன்னெடுக்கப்பட்ட “அத்தம” தேசிய தூய்மைத் தினத்தின் அம்பாறை மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு இன்று (19) கல்முனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இஸ்லாமாபாத் (கல்முனை – 01) கிராமத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
கல்முனை பிரதேச செயலாளர் ரீ.எம்.எம். அன்சார் தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதியமைச்சரும் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான வசந்த பியதிஸ்ஸ பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
அத்துடன், கௌரவ அதிதிகளாக அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களுக்கான பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா மற்றும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அனுபம மங்கள விக்ரமாராச்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவ் விசேட சிரமதானப் பணியில் அம்பாறை மாவட்ட செயலகம், கல்முனை பிரதேச செயலகம், கல்முனை மாநகர சபை, கல்முனை நீர்ப்பாசன திணைக்களம், பொலிஸ் மற்றும் கடற்படை ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த உயரதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பிரதேச பொதுமக்கள் பலர் ஒன்றிணைந்து பங்கேற்றனர்.
இதன்போது இஸ்லாமாபாத் கிராமத்தில் அமைந்துள்ள தொடரடுக்கு வீடமைப்புத் தொகுதி மற்றும் அதனைச் சூழ்ந்துள்ள சுற்றுப்புறச் சூழல்கள் முழுமையாகச் சுத்திகரிக்கப்பட்டுத் தூய்மைப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.




