இலங்கைபிரதான செய்திகள்
Trending

பெண் பிரதிநிதித்துவத்தை காரணமாகக் காட்டி தேர்தலை நடத்தாமலிருக்க இடமளிக்கமாட்டோம் – இலங்கைத் தமிழரசுக்கட்சி

மாகாணசபைகளில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் உறுதிசெய்யப்படுவதனை நாம் ஆதரிக்கின்றோம். ஆனால் அந்தத் திரைக்குள் மறைந்திருந்து மாகாணசபைத்தேர்தலை நடத்தாமல் தப்பிப்பதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்திய நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் (18) எல்லை நிர்ணய மசோதா தோற்கடிக்கப்பட்ட சம்பவத்துடன் எமது நாட்டில் நடைபெறும் சில விடயங்களை ஒப்பிட்டு தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

மாகாணசபைத்தேர்தலை நடத்தாமல் தவிர்ப்பதற்குக் கூறப்படும் காரணங்களில் ஒன்று, பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் சட்டத்திருத்தத்தையும் இணைத்து தேர்தலை நடத்துவதற்கு ஏதுவான திருத்தத்தை நிறைவேற்றலாம் என்பதாகும்.

மாகாணசபைத்தேர்தல்களைப் பழைய முறையிலேயே நடத்துவது குறித்து கடந்த இரண்டு பாராளுமன்றங்களிலும் நான் தனிநபர் பிரேரணைகளை முன்வைத்தபோது இவ்வாறு தான் கூறப்பட்டது. பெண்களுக்கான பிரதிநிதித்துவம் உறுதிசெய்யப்படுவதனை நாம் ஆதரிக்கின்றோம்.

ஆனால் அந்தத் திரைக்குள் மறைந்திருந்து தேர்தலை நடத்தாமல் தப்பிப்பதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். அதேவேளை இந்தியாவைப் பொறுத்தமட்டில் சனத்தொகை அதிகரித்தமையினால் மற்றைய மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவ எண்ணிக்கையைக் கூட்டினால்,சனத்தொகைக் கட்டுப்பாடு என்ற தேசிய கொள்கையை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய தமிழகத்துக்குப் பிரதிநிதித்துவ எண்ணிக்கை குறைவடையும்.

அதேபோன்று எமது நாட்டிலும் தொடர் வன்முறைகளினால் தமிழ்மக்கள் புலம்பெயர்ந்த காரணத்தினால் எமது பிரதிநிதித்துவ எண்ணிக்கை வெகுவாக வீழ்ச்சியடைந்திருக்கிறது. இது பனையால் விழுந்தவனை மாடு ஏறி மிதிப்பதைப் போன்றதாகும். மக்களை அடித்துத் துரத்திவிட்டு,’சனத்தொகை குறைந்துவிட்டது. ஆகையினால் பிரதிநிதிகளின் எண்ணிக்கையும் குறையவேண்டும்’ என்று கூறுவது நியாயமற்றதாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker