அரச வைத்திய அதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு இரண்டாவது நாளாகவும் நீடிப்பு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு இன்று வெள்ளிக்கிழமை (10) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. இதனால் வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதுடன், நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
பயிற்சி பெற்ற வைத்தியர்களுக்கான நியமனங்களை வழங்குவதில், எட்டப்பட்ட உடன்பாடுகளை சுகாதார அமைச்சு மீறியுள்ளதாகக் குற்றம் சுமத்தி நேற்று (09) காலை 8.00 மணி முதல் இந்த பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நியமனப் பட்டியலை உடனடியாக இரத்து செய்து, இப்பிரச்சினைக்கு முறையான தீர்வு வழங்கும் வரை போராட்டத்தை தொடரப்போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. எனினும், இது தொடர்பாக குறித்த சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதை சுகாதார அமைச்சர் இதுவரை நிராகரித்து வருகின்றார்.
அதேநேரம், நாடளாவிய ரீதியில் உள்ள தமது உறுப்பினர்களுடன் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாகவும், அதன் பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் சங்கத்தின் பிரதம செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகந்ததாச தெரிவித்துள்ளார்.



