புதிய கல்வி சீர்திருத்தங்கள் பெயரில் மோசடி : கல்வி அமைச்சு எச்சரிக்கை !

புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம் உருவாக்கப்படும் கல்வி சபை என்ற பெயரில் இயங்கும் மோசடி வட்ஸ் அப் குழு தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கல்வி செயற்பாடுகளில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர்களையும் ஒன்றிணைப்பதாகக் கூறப்படும் இந்தக் குழு, எந்த வகையிலும் அமைச்சுடன் இணைந்து செயற்ப்படவில்லை எனவும் அதனால் அங்கீகரிக்கப்படவில்லை எனவும் அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளது.
வட்ஸ் அப் மூலம் மேற்கொள்ளப்படும் எந்தவொரு தகவல்தொடர்புகள் அல்லது செயல்பாடுகளுக்கும் அமைச்சு பொறுப்பேற்கமாட்டாது என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கல்வியியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்த்திருத்த முயற்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்த முயற்சிக்கும் குழுக்களால் தவறாக வழிநடத்தப்படுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.



