அக்கரைப்பற்றில் கட்டாக்காலி மாடுகள் கைப்பற்றப்பட்டு, தண்டப்பணம் அறவீடு; ஆலையடிவேம்பு பிரதேச சபை நடவடிக்கை.!

ஆலையடிவேம்பு பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் கட்டாக்காலி மாடுகள் இரவு பகல் என வீதியிலேயே நடமாடி திரிவதால் பாதைகளில் பயணம் மேற்கொள்வோருக்கு விபத்துக்கள் ஏற்படும் அபாய நிலையும் மேலும் அசௌகரியமாகவும் இருப்பதாக தொடர்ச்சியாக மக்களிடம் இருந்து வந்த பல முறைப்பாடுகளுக்கு அமைவாக,
ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் ஆ.தர்மதாச தலைமையில் இன்றைய தினம் (04) அக்கரைப்பற்று – சாகாம பிரதான வீதியில் நடமாடிய கட்டாக்காலி மாடுகளின் ஒரு பகுதி ஆலையடிவேம்பு பிரதேச சபையினரால் கைப்பற்றப்பட்டது.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட மாடுகளுக்கு தண்டப் பணம் அறவிடப்பட்டதுடன் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு ஏலவே பிடிபட்ட மாடுகள் மீண்டும் பொது இடங்களில் நடமாடுமாயின் அவை மீண்டும் கைப்பற்றப்படுவதுடன் அவற்றின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதிக தண்டப்பணம் அறவிடப்படும் அல்லது அரசுடமையாக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர் கதிகரன் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், அக்கரைப்பற்று பொலிஸார் இணைந்து கொண்டிருந்தனர்.
இன்றைய தினம் ஒரு தொகுதி கட்டாக்காலி மாடுகள் மாத்திரமே கைப்பற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது, எனினும் எதிர் வருகின்ற நாட்களில் பிரதேசத்தின் அனைத்து இடங்களிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கின்றார்கள் ஆலையடிவேம்பு பிரதேச சபையினர்.



