இலங்கைபிரதான செய்திகள்
Trending
புலமைப்பரிசில் பரீட்சை மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை !

ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சையை கருத்தில் கொண்டு, இன்று (06) நள்ளிரவுக்குப் பின்னர் பரீட்சை முடியும் வரை புலமைப்பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புக்களை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பரீட்சார்த்திகளுக்கான மேலதிக கல்வி வகுப்புகளை ஏற்பாடு செய்து நடத்துதல், பாடம் தொடர்பான விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி பட்டறைகளை நடத்துதல் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைக்கான யூக கேள்விகள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிட்டு விநியோகித்தல், பரீட்சைக்கான வினாத்தாள்களை வழங்குவதாகவும் அல்லது அதற்கு சமமான கேள்விகளை வழங்குவதாகவும் சுவரொட்டிகள், பதாகைகள் மற்றும் துண்டுப் பிரசுரங்களை வெளியிடுதல் அல்லது மின்னணு அல்லது அச்சு ஊடகங்கள் அல்லது சமூக ஊடகங்கள் மூலம் அவற்றை வைத்திருப்பது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுகளை மீறி எந்தவொரு நபரோ அல்லது நிறுவனமோ செயல்பட்டால், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற அவசர தொலைபேசி எண்ணுக்கோ அல்லது பாடசாலை பரீட்சை அமைப்பு, முடிவுகள் கிளையிலோ 0112 784208 அல்லது 0112 784537 என்ற எண்களுக்கு அழைத்து முறையிடவும் முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நாடு முழுவதும் 2,787 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.