ஆலையடிவேம்பு பிரதேசத்தில் காட்டுயானை அட்டகாசம்: தீர்வு பெற்றுத்தரக்கோரி பிரதேச மக்கள் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்!!

அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கண்ணகி கிராமம், கபடாப்பிட்டி, புளியம்பத்தை, அளிக்கம்பை, சாந்திபுரம் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தொடர்ச்சியாக காட்டு யானைகளின் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதோடு ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் இரவு நேரங்களில் மக்கள் குடியிருப்புகள், விவசாய நிலங்களுக்குள் வருகைதந்து தொடந்து அட்டகாசம் புரிந்துவருகின்ற நிலையில் இதற்கான நிரந்தர தீர்வு பெற்றுத்தரக்கோரி பொதுமக்கள் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் முன்னாள் இன்று வியாழக்கிழமை (09) கவனயீர்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரதேச சமூக மட்ட அமைப்புக்கள் மற்றும் பிரதேச பொதுமக்கள் ஒன்றிணைந்து ஒழுங்கு செய்யப்பட்ட கவனயீர்பு ஆர்ப்பாட்டத்தில் பிரதேச செயலகத்தின் முன்னாள் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றிணைந்தனர்.
குறித்த காட்டுயானை பிரச்சினைக்கு தீர்வாக யானை வேலி அமைத்துத்தருமாறும் உடனடித்தீர்வான வனஜீவி உத்தியோகத்தர்களின் உதவியுடன் யானைகளை காடுகளுக்கு அப்புறப்படுத்தி மக்களை அச்சத்திலிருந்து மீட்டுத்தருமாறும் என்ற வாசகங்கள் கொண்ட சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து அம்பாறை அரசாங்க அதிபர், வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சு என சம்மந்தப்பட்டவர்களுக்கான மகஜரை தீர்வை பெற்றுத்தரக் கோரி ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரனிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்வர்கள் வழங்கிய பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.