போர்வெல் மூலம் 3 துளைகள் – புது திட்டம் மூலம் தொடரும் மீட்புப்பணி!

ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணிகள் 68 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

கடினமானப் பாறைகள் இருப்பதால் குழிதோண்டும் பணியில் தொய்வு ஏற்பட்டது. பின்னர் தொடர்ந்து நடந்து வருகிறது.
ரிக் இயந்திரம் தொடர்ந்து குழி தோண்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. தற்போது 45 அடி வரை குழி தோண்டப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து குழி தோண்டப்படும் என வருவாய் ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ரிக் இயந்திரத்தால் பாறைகளை உடைக்க முடியாததால் போர்வெல் மூலம் பாறைகளைத் துளையிட்டு குழியை தோண்ட முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து போர்வெல் மூலம் துளையிடும் பணி தொடங்கியுள்ளது. அதன்படி குறிப்பிட்ட ஒரு மீற்றர் அகலத்துக்குள் போர்வெல் மூலம் 3 துளைகளிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
துளைகள் இடப்பட்டால் பாறைகள் நொறுக்கப்படும். பின்னர் ரிக் இயந்திரம் மூலம் எளிதாக குழி தோண்ட முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.



