ஆலையடிவேம்பு

அரச விடுமுறை தினத்திலும் ஆலையடிவேம்பில் மக்களது உணவு முத்திரை கொடுப்பனவுகளை வீடுகளுக்கு சென்று ஒப்படைக்கும் பணி…

வி.சுகிர்தகுமார் 

பொது மக்களுக்கான சமுர்த்தி கொடுப்பனவின்போது கொரோனா தொற்றுக்குள்ளாகி சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் அன்மையில் மரணமடைந்த நிலையிலும் சமுர்த்தி வங்கிகள் ஊடாக மக்களின் பணத்தேவையினை நிறைவேற்றும் நடவடிக்கையில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமையாளர்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான பாதுகாப்பை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அரச விடுமுறை தினமான இன்றும் நாளையும் சேவையில் இருந்து விலகி இருக்குமாறும் அழைப்பு விடுத்திருந்தது.

இருந்தபோதிலும் மக்களின் நலன் கருதி சமுர்த்தி வங்கிகள் மற்றும் சமுர்த்தி வங்கிச்சங்க உத்தியோகத்தர்கள் கள உத்தியோகத்தர்கள் தமது பணிகளை பல சிரமங்களுக்கு மத்தியில் இன்று முன்னெடுத்தனர்.

இதற்கமைவாக அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆலையடிவேம்பு வடக்கு மற்றும் தெற்கு வங்கிகள் இன்று திறக்கப்பட்டதுடன் மக்களது உணவு முத்திரை கொடுப்பனவுகளை அவர்களின் வீடுகளுக்கு கொண்டு ஒப்படைக்கும் பணியை முன்னெடுக்கப்பட்டது.

பிரதேச செயலக பிரிவுகளில் வாழும் மக்களது முத்திரை கொடுப்பனவுகள் குறித்த பிரிவிற்கான சமுர்த்தி உத்தியோகத்தரிடம் வங்கி முகாமையாளர்களால் ஒப்படைக்கப்பட்டதுடன் அப்பணத்தை பிரிவுகளில் வாழும் மக்களின் வீடுகளுக்கு சென்று ஒப்படைக்குமாறும் பணிக்கப்பட்டது.

இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரனின் கண்காணிப்பின் கீழ் இன்று இடம்பெற்ற இப்பணியை சமுர்த்தி முகாமையாளர்களான கே.அசோக்குமார் மற்றும் க.கண்ணதாசன் ஆகியோர்கள் முன்னெடுத்ததுடன் சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் சிவப்பிரியா சுதாகரன் மற்றும் கருத்திட்ட முகாமையாளர் க.சுரேஸ்காந் உள்ளிட்டவர்கள் மேற்பார்வை செய்தனர்.

இதன் பயனாக மக்கள் தமது வீடுகளில் இருந்தவாறே குறித்த பணத்தை பெற்றுக்கொண்டதுடன் இக்கட்டான இச்சூழலில் பணியை முன்னெடுக்கும் உத்தியோகத்தர்களுக்கும் அரசுக்கும் நன்றி தெரிவித்தனர்.

இதேநேரம் அம்பாரை மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1083 ஆக அதிகரித்துள்ளதுடன் கல்முனை பிராந்தியத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 130 ஆக உயர்வடைந்துள்ளது.

பயணக்கட்டுப்பாடுகள்; அமுல்படுத்தப்பட்ட நிலையில் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசங்களில் வாழும் மக்கள் சட்டத்திட்டங்களுக்கு மதிப்பளித்து தேவையின்றி வெளியேறுவதை தவிர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker