
அரச உத்தியோகத்தர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சம்பளமற்ற விடுமுறைகளை அங்கீகரிப்பதை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது.
சிரேஷ்டத்துவம் மற்றும் ஓய்வூதியத்திற்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அரச உத்தியோகத்தர்களுக்கு அதிகபட்சம் 5 வருடங்களுக்கு உட்பட்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சம்பளமற்ற விடுமுறைகளை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கி, 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் பொது நிர்வாக சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய, அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளின் கீழ் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விடுமுறைகளை அங்கீகரிப்பதை உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை தற்போது உள்நாட்டு, வெளிநாட்டு விடுமுறையில் உள்ள உத்தியோகத்தர்களுக்கு, அங்கீகரிக்கப்பட்டுள்ள கால எல்லைக்கு அமைவாக மாத்திரம் அந்த விடுமுறையைத் தொடர்ந்து பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரையில் விடுமுறைக்கான அனுமதியைப் பெற்று, அந்த விடுமுறையைக் கழிக்கத் தயாராக இருக்கும் உத்தியோகத்தர்களுக்கு, அங்கீகரிக்கப்பட்டுள்ள காலப்பகுதிக்கு அமைய விடுமுறையைப் பெற்றுக்கொள்ளும் சாத்தியம் உள்ளதாக பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வெளிநாட்டு விடுமுறையைப் பெற்றுக்கொள்வதற்காக தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள, அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்த புதிய விடுமுறை விண்ணப்பங்கள் மற்றும் விடுமுறை நீடிப்பு விண்ணப்பங்களுக்குப் புதிய சுற்றறிக்கையினால் பாதிப்பு ஏற்படாது. அதேவேளை தேவைகளைப் பூர்த்தி செய்யாத மற்றும் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களில் குறைபாடுகள் உள்ள விடுமுறை விண்ணப்பங்கள் மீள்பரிசீலனை இன்றி நிராகரிக்கப்படும் என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் உள்நாட்டு விடுமுறைக்காகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விடுமுறை விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள புதிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



