விளையாட்டு

‘ஏடிபி பைனல்ஸ்’ தொடரில் இம்முறையாவது சம்பியன் பட்டம் வெல்வாரா நடால்?

இதுவரை ‘ஏடிபி பைனல்ஸ்’ தொடரில் சம்பியன் பட்டம் வெல்லாத ஸ்பெயினின் முன்னணி வீரரான ரஃபேல் நடால், இம்முறை சம்பியன் பட்டம் வெல்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

ஸ்பெயினின் ரஃபேல் நடால், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று, ஆடவர் ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர்கள் வரிசையில் ஜாம்பவான் ரோஜர் ஃபெடரருடன் முதலிடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

ஆனால், இதுவரை ‘ஏடிபி பைனல்ஸ்’ தொடரில் சம்பியன் பட்டம் வெல்லாத நடால், 2010ஆம், 2013ஆம் ஆகிய ஆண்டுகளில் இறுதிப் போட்டி வரை மட்டுமே முன்னேறியுள்ளார். இந்த நிலையில் உள்ளக ஆடுகளத்தில் நடைபெறும் ஏடிபி பைனல்ஸ் தொடரில் வெல்வதில் நடால் தீவிரமாக உள்ளார்.

நடால் ஒற்றையர் பிரிவில் 86 பட்டங்களை வென்றபோதிலும், அதில் உள்ளக தொடரில் (2005ஆம் ஆண்டு மட்ரிட் பகிரங்க டென்னிஸ்) ஒரேயொரு பட்டம் மட்டுமே வென்றுள்ளார்.

இந்தநிலையில் இதுகுறித்து நடால் கூறுகையில், ‘உள்ளக ஆடுகளத்தில் நடைபெறும் ஏடிபி பைனல்ஸ் தொடரில் இதுவரை பட்டம் வெல்லாததற்கு ஆண்டின் கடைசியில் நடைபெறும் இந்த தொடரில் பங்கேற்கும்போது களைப்படைந்திருக்கலாம் அல்லது உள்ளக அதிக போட்டிகளில் விளையாடாமல் இருந்ததால் எனக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கலாம்.

எனது டென்னிஸ் வாழ்க்கையின் தொடக்கம் முதலே எனக்கு உள்ளக ஆடுகளங்கள் பெரிய அளவில் பரிச்சயம் இல்லை. அதேநேரத்தில் கடந்த சில ஆண்டுகளாக உள்ளக ஆடுகளத்தில் எனது ஆட்டத்திறன் மேம்பட்டிருப்பதாகவே நினைக்கிறேன்.

கடந்த வாரம் பரிஸ் மஸ்டர்ஸ் தொடரில் விளையாடியதன் மூலம் உள்ளக ஆடுகளங்களில் எனது ஆட்டத்திறன் மேலும் மேம்பட்டிருக்கிறது. ஆனால், ஏடிபி பைனல்ஸ் தொடருக்கு பரிஸ் மாஸ்டர்ஸ் மூலம் எந்தளவுக்கு துல்லியமாக தயாராகியிருக்கிறேன் என்று தெரியவில்லை. ஏடிபி பைனல்ஸ் தொடரை ரசிகர்கள் இல்லாத காலியான மைதானத்தில் விளையாடுவது வருத்தமளிக்கிறது’ என கூறினார்.

உலகின் தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்கும் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர் லண்டனில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகின்றது. இதில் பங்கேற்கும் 8 வீரர்களும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.

ஏடிபி பைனல்ஸ் தொடர் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இந்த ஆண்டு ஏடிபி பைனல்ஸ் தொடரில் இடம்பெற்றுள்ள இரு பிரிவுகளுக்கும் ‘டோக்கியோ 1970’ , ‘லண்டன் 2020’ என பெயரிடப்பட்டுள்ளன.

இதன்படி ‘டோக்கியோ 1970’ பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ரஷ்யாவின் டேனியல் மெட்வேடவ், ஜேர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ், அர்ஜென்டீனாவின் டீகோ ஸ்வார்ட்ஸ்மான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

‘லண்டன் 2020’ பிரிவில் ஸ்பெயினின் ரஃபேல் நடால், ஆஸ்திரியாவின் டொமினிக் தீம், கிரேக்கத்தின் ஸ்டெபனோஸ் ஸிட்சிபாஸ், ரஷ்யாவின் ஹென்ரி ருபெல்வ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதில், ஒவ்வொரு வீரரும் தங்கள் பிரிவில் இடம்பெற்றுள்ள மற்ற வீரர்களுடன் தலா ஒரு முறை மோதுவர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் வீரர்கள் அரையிறுதிக்கு முன்னேறுவர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker