ஆலையடிவேம்பு

அம்பாரை மாவட்டத்தின் அபிவிருத்திக்கான விசேட அதிரடிப்படையணி உருவாக்கப்பட்டு அபிவிருத்தி பணிகளும் முன்னெடுக்கப்படும் – ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் சஜித்….

வி.சுகிர்தகுமார்

தேர்தலின் பின்னர் அம்பாரை மாவட்டத்தின் அபிவிருத்திக்கான விசேட அதிரடிப்படையணி உருவாக்கப்பட்டு அதன் மூலம் பிரதமரின் நேரடி கண்காணிப்பில் மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தி பணிகளும் முன்னெடுக்கப்படும் என ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்பிரேமதாசா தெரிவித்தார்.

அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் ஜக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிடும் ஒரே தமிழ் வேட்பாளரான வி.வினோகாந்தின் அழைப்பின் பேரில் வருகை தந்த அவருக்கு மக்கள் சிறந்த வரவேற்பளித்தனர்.

தொடர்ந்தும்; அவர் உரையாற்றுகையில்… எனது தந்தையின் வழியில் வந்தவன் நான். அவருடன்; தமிழ் மக்கள் நெருக்கமாக இருந்தவர்கள். அவரைவிடவும் தமிழ் மக்களுடன் நெருக்கமாக இருப்பதற்கே நான் விரும்புகின்றேன். அதுபோல் தமிழ் மக்களில் 95 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் என்னை ஜானதிபதியாக உருவாக்க வேண்டும் என கடந்த தேர்தலில் முயற்சி செய்திருக்கின்றீர்கள். ஆகவே அந்த நன்றியுனர்வுடன்  நான் இருப்பேன்.

அந்த அம்பாரை மாவட்டத்தில் தமிழ் மக்கள் சார்பில் போட்டியிடும் சகோதரர் வினோகாந் மாவட்டத்தின் சகல கிராமங்களின் தேவைகள் தொடர்பில் நன்கறிந்தவர். ஆகவே அவர் மூலம் அறிந்து கொண்ட விடயங்கள் யாவும் எதிர்வரும் தேர்தலின் பின்னர் நிறைவேற்றித்தரப்படும். எனவே அவருக்கு உங்கள் ஒத்துழைப்பை வழங்குங்கள் என கேட்டுக்கொண்டார்.

இதேநேரம் மக்கள் கவலை கொள்ள தேவையில்லை என கூறிய அவர் எதிர்வரும் 5ஆம் திகதிக்கு பின் நமது ஆட்சி அமையும். அதன் பின்னர் சகல மக்கள் தேவைப்பாடுகளும் பூர்த்தி செய்யப்படும். குறிப்பாக அம்பாரை மாவட்டத்தில் நீர்ப்பாசன வசதியின்றி விவசாயத்தினை மேற்கொள்ள முடியாமல் இருக்கும் இருபத்தி ஜயாயிரத்திற்கும் மேற்பட்ட காணிகளை விவசாய செய்கைக்காக பெற்றுக்கொடுப்பேன். அதற்காக கஞ்சிகுடியாறு, காஞ்சிரங்குடா போன்ற குளங்களை அபிவிருத்தி செய்து தருவேன் என்றார்.

எனது தந்தையினால் திறக்கப்பட்டு மூடப்பட்டிருக்கும் ஆடைத்தொழிற்சாலைகளை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன். அதன் மூலம் பல இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பை பெற்றுக்கொடுப்பேன். பால் உற்பத்தியை அதிகரிப்பதன் பொருட்டு பால் சேகரிக்கும் பாற்பண்ணை தொழிற்சாலையை உருவாக்குவேன்.

மேலும் அம்பாரை மாவட்டத்தில் 134 வீட்டுத்திட்டங்களை நான் ஆரம்பித்தேன். அதில் 25 வீட்டுத்திட்டங்களை கையளித்துள்ளேன். இந்நிலையில் கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அம்பாரை மாவட்டம் உள்ளிட்ட சகல மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுவந்த வீட்டுத்திட்டங்களும் நிறுத்தப்பட்டது. இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சகல வீட்டுத்திட்டங்களும் எதிர்வரும் புதிய ஜக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் ஆரம்பிக்கப்படும் என குறிப்பிட்டார்.

இதேபோன்று எமது புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட பின் எதிர்வரும் 5 வருடத்தில் செமட்ட செவன வீட்டுத்திட்டத்தின் ஊடாக  அம்பாரை மாவட்டத்தில் வீட்டுத்தேவையுடைய அனைவரது கோரிக்கைகளும் நிறைவேற்றிக்கொடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

அத்தோடு அம்பாரை மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினையான குடிநீர்ப்பிரச்சினைக்கும் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்றார்.

இவ்வாறு பல திட்டங்களையும் சகோதரர் வினோகாந்த் என்னிடம் முன்மொழிந்துள்ளார். அவ்வாறு அவரால் முன்மொழியப்பட்ட அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றித்தருவேன் என உறுதியளித்த அவர் வினோகாந்திற்கு முழு ஆதரவையும் வழங்கி அவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker