விளையாட்டு

புஜாரா, ஜடேஜா உட்பட இந்திய வீரர்களுக்கு தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகாமை முக்கிய அறிவிப்பு

லோகேஷ் ராகுல், ரவீந்திர ஜடேஜா உட்பட 3 இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகாமையால் அறிவிப்பொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வீரர்கள் தங்களின் இருப்பிடம் குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்க தவறியதன் விளைவாக விளக்கம் கேட்டு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் போட்டியின் போதும், போட்டி இல்லாத காலங்களிலும் தாங்கள் எங்கு இருக்கிறோம் என்கிற விவரத்தை தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகாமைக்கு 3 மாதங்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். அத்துடன் ஊக்க மருந்து பரிசோதனைக்கும் தயாராக இருக்க வேண்டும் என்பது விதிமுறையாகும்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமுலில் இருப்பதால் சில வீரர்கள் தாங்கள் இருக்கும் இடம் குறித்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமைக்கு சரியான தகவலை அளிக்கவில்லை. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர், வீராங்கனைகளும் அடங்குவார்கள்.

தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகாமையின் விதிமுறையை முறையாகக் கடைப்பிடிக்க தவறியதாக இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் புஜாரா, லோகேஷ் ராகுல், ரவீந்திர ஜடேஜா மற்றும் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனைகள் மந்தனா, தீப்தி ஷர்மா ஆகியோருக்கு தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகாமை விளக்கம் கேட்டு அறிவித்தல் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையின் இயக்குநர் ஜெனரல் நவின் அகர்வால் கூறுகையில், ‘‘தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையால் கேட்கப்படும் எங்கு இருக்கிறேன்? என்பது குறித்த விவரத்தை வீரர்கள் இரண்டு வழிகளில் பூர்த்தி செய்யலாம்.

சம்பந்தப்பட்ட வீரரே அதனை எங்கள் இணையத்தளத்தின் மூலம் தெரிவிக்கலாம். அல்லது வீரர்கள் சார்பில் சம்பந்தப்பட்ட விளையாட்டு அமைப்பு விபரங்களை பதிவேற்றம் செய்யலாம்.

சில விளையாட்டுகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு இணையத்தளத்தில் இந்த விபரங்களைப் பதிவிடுவது எப்படி என்பது தெரியாமல்கூட இருக்கலாம். எனவே இந்த விபரங்களை அளிக்கும் பொறுப்பை விளையாட்டு சம்மேளனங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன.

இணையத்தள நடைமுறையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வீரர்கள் இருப்பிடம் குறித்த விபரத்தை தெரிவிப்பதில் காலதாமதமாகி விட்டது என்றும் தற்போது அந்த பிரச்சினை தீர்ந்து விட்டது என்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இந்த விளக்கம் குறித்து நாங்கள் ஆலோசித்து முடிவு செய்வோம்’’ என்றார்.

இதேவேளை, வீரர் ஒருவர் 3 முறை தனது இருப்பிடம் குறித்த தகவலை முறைப்படி தெரிவிக்கத் தவறினால் அந்த வீரருக்கு 2 ஆண்டுகள் வரை தடை விதிக்க ஊக்க மருந்து தடுப்பு விதிமுறையில் இடம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker