இலங்கையில் பாலியல் வன்முறைகள் அதிகரிப்பு: சர்வதேச மன்னிப்புச்சபை அறிக்கை

இலங்கையில் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.

உலகளாவிய ரீதியில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி சர்வதேச மகளிர் தினம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சர்வதேச மன்னிப்புச்சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
2020ஆம் ஆண்டின் முதல் 15 நாட்களில் இலங்கையில் 142 பாலியல் துஷ்பிரயோக வழக்குகளும், 42 கடுமையான பாலியல் துஷ்பிரயோக வழக்குகளும், 54 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளும் பதிவாகியுள்ளமையை சர்வதேச மன்னிப்பு சபை குறிப்பிட்டுள்ளது.
கற்பழிப்பு வழக்குகளில் 78, கடுமையான பாலியல் வன்முறை வழக்குகளில் 21 மற்றும் சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளில் 34 விசாரணைகள் ஏற்கனவே முடிந்துவிட்டதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இருப்பினும், 2019 CEDAW மறுஆய்வுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, 2015 ஆம் ஆண்டில் 16 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 379 வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால் 365 வழக்கு விசாரணைகள் முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன.
2016இல், 350 துஷ்பிரயோக வழக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றுள் 337 வழக்குகள் நிலுவையில் உள்ள அதேவேளை, 2017 ஆம் ஆண்டில் 294 துஷ்பிரயோக வழக்குகளில் 281 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் சர்வதேச மன்னிப்பு சபை சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், இலங்கையில் மொத்த துஷ்பிரயோக வழக்குகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளதாகத் தெரிவித்துள்ள குறித்த அமைப்பு, பல வழக்குகள் பதிவு செய்யப்படாமல் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டபோதும் ஒரு சிறிய சதவீத வழக்குகள் மட்டுமே நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள் வரை செல்கின்றன என்றும் சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.
இந்த பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதாக தொடர்ச்சியாக வரும் அரசாங்கங்கள் பலமுறை உறுதியளித்த போதிலும் இலங்கையில் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகள் அதிகமாக இருப்பதாக சர்வதேச மன்னிப்பு சபை சுட்டிக்காட்டியுள்ளது.
				
					


