ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வங்கி தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் (ATM ) வேண்டிய பாரிய கையெழுத்து வேட்டை எட்டாம் நாள் நிலவரம்…

அக்கரைப்பற்று தமிழ் பிரிவு ஆலையடிவேம்பு பிரதேசம் அண்ணளவாக 26,941 மக்கள் தொகையை கொண்டு காணப்படுகின்ற போதிலும் ஆலையடிவேம்பு பிரதேச பகுதியில் வங்கி தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் ஒன்று இல்லாமல் மக்கள் தொலைதூரங்களுக்கு சென்று குறித்த சேவையைப் பெற்றுக்கொள்ளும் அவல நிலையில் பெரிதும் சிரமங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வாழ்ந்து வருகின்ற நிலையில்.
பிரதேச மக்களின் நீண்ட நாள் தேவையாக காணப்படுகின்ற குறித்த வங்கி தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் (ATM ) குறைந்தது ஒன்றையாவது நிலைநிறுத்த வேண்டும் என வங்கிகளை வலியுறுத்தும் வகையில் மேற்படி கோரிக்கை அடங்கிய ஆவணத்திற்கு 5000 பேரின் கையெழுத்து வேண்டி கையெழுத்து வேட்டை தன்னார்வம் கொண்டவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் எட்டாம் நாளாகிய இன்றைய தின முடிவில் 4500 கையெழுத்துக்களை அண்மித்த கையெழுத்துக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டு இலக்கை நோக்கிய வெற்றிப்பாதையில் சென்று கொண்டு இருக்கின்றது.
இவ் தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் வேண்டிய கையெழுத்து வேட்டை கட்டம் கட்டமாக கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளுடன் பிரதேச சமூக அமைப்புக்கள் மற்றும் தன்னார்வம் கொண்டவர்களின் ஒத்துழைப்புடன் ஆரவாரம் இல்லாமல் இடம்பெற்று வருகின்றது.
மேலும் தன்னார்வம் கொண்ட சமுக அக்கறையாளர்களால் மேற்கொள்ளப்படும் வங்கி தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் (ATM ) வேண்டிய செயற்றிட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் பலரும் தங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.