இலங்கை

காரைதீவு வீரபத்திரர் ஆலயத்தின் கல்வி பணி தை பூச திருநாளில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பம்…

வி.சுகிர்தகுமார்  
 காரைதீவு – 03 இல் வசிக்கின்ற வறிய குடும்பங்களை சேர்ந்த தரம் – 06 முதல் தரம் 10 வரையிலான வகுப்புகளுக்கு உட்பட்ட மாணவர்களின் பாடசாலை கல்வி நடவடிக்கைகளுக்கு முழுமையான பங்களிப்பை வழங்குவதற்கு காரைதீவு ஸ்ரீ வீரபத்திரர் ஆலயம் முன்வந்து உள்ளது.இதற்கு அமைய முதல் கட்டமாக தை பூச திருநாளில் 10 மாணவர்களை பொறுப்பெடுத்து சகாய நிதி, கற்றல் உபகரணங்கள் ஆகியவற்றை சம்பிரதாயபூர்வமாக வழங்கி வைத்தது.

ஆலயத்தில் பொது சுகாதார நடைமுறைகளுக்கு அமைய இடம்பெற்ற விழாவில் வைத்து பிரதம விருந்தினரான காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன், ஆலய பரிபாலன சபை தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் எஸ். நேசராசா, இப்பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஆறுமுகம் பூபாலரட்ணம் உள்ளிட்ட அதிதிகள் பயனாளிகளுக்கு வங்கி வைப்பு புத்தகம், கற்றல் உபகரண பொதி ஆகியவற்றை கையளித்தார்கள்.

ஆலய பரிபாலன சபை உறுப்பினர் எஸ். மணிமாறன் இங்கு உரையாற்றுகையில் முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பயனாளி மாணவர்களுக்கு மாதாந்தம் தலா 2500 ரூபாய் படி 30000 ரூபாய் வைப்பு செய்யப்பட்டு உள்ளது, 30 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர், அவர்களும் அடுத்த அடுத்த கட்டங்களில் பயனாளிகளாக இணைத்து கொள்ளப்படுவார்கள் என்று பேசினார்.

பிரதம விருந்தினர் எஸ். ஜெகராஜன் உரையாற்றுகையில் அசுரர்களை அழிக்க அவதரித்தவர் முருக பெருமான், தை பூச நன்னாள் முருக பெருமான் அவதரித்த திருநாள் ஆகும், அசுரர்கள் என்பவர்கள் நமக்கு வெளியே மட்டும் அல்ல நமக்கு உள்ளேயும் இருக்கின்றனர், நமக்கு உள்ளே இருக்கின்ற அசுர குணங்கள் அழிக்கப்பட வேண்டும், அவற்றை அழிப்பதற்கு ஒழுக்கத்துடன் கூடிய கல்வி அவசியம் ஆகும்,

அத்தகைய கல்வியை எமது சமூகத்திலே விதைக்க கூடிய மகத்தான நற்பணியை இந்நன்னாளில் சம்பிரதாயபூர்வமாக எமது வீரபத்திரர் ஆலயம் ஆரம்பித்து இருப்பது மிக் பொருத்தமான முன்னுதாரண நடவடிக்கை ஆகும் என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker