மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கல்லடியில் வடிகான் பகுதி அபகரிப்பு: மட்டக்களப்பு மாநகர மேயர் தலையீட்டில் முறியடிப்பு…

ஜே.கே.யதுர்ஷன்
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள வடிகான் பகுதியை அபகரிக்க ஒரு சிலரால் முன்னெடுக்கப்பட்ட முயற்சி நேற்று (22) மட்டக்களப்பு மாநகர மேயர் திரு.சரவணபவன் அவர்களின் தலையீட்டினால் முறிடியக்கப்பட்டது .
குறித்த அபகரிப்புக்கு கொண்டுவரப்பட்ட பொருட்களும் மாநகரசபையினால் கையகப்படுத்தப்பட்டன.
மேலும் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள வடிச்சல் பகுதியை தொடர்ச்சியாக அபகரிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் நிலையில் அவற்றினை தடுத்து நிறுத்துதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன.
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் மழைகாலங்களில் ஏற்படும் வெள்ளத்தினை வாவியில் கொண்டு சேர்க்கும் பகுதியாக குறித்த வடிச்சல் பகுதி காணப்பட்டு வருதாக மட்டக்களப்பு மாநகர மேயர் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்..
நீண்டகாலமாக குறித்த பகுதியை சிலர் அபகரிக்கும் நோக்குடன் வேலி அடைக்க முற்படும் நிலையில் அவற்றினை தடுக்கும் செயற்பாடுகளை பிரதேச மக்களும் மாநகரசபையும் பிரதேச செயலகமும் இணைந்து முன்னெடுத்துவருகின்றது.
சிலர் குறித்த வடிச்சல் பகுதியை வேலியிட்டு அடைக்கமுற்பட்டபோது அங்கு சென்ற மாநகர மேயர் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை கெளரவ உறுப்பினர்களும் குறித்த நடவடிக்கையினை பொதுமக்களின் உதவியுடன் தடுத்து நிறுத்தியதுடன் அது தொடர்பில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவனின் கவனத்திற்கு கொண்டுசென்றதை தொடர்ந்து பிரதேச செயலாளர் வருகை தந்து குறித்த செயற்பாட்டை நிறுத்துமாறு அபகரிப்பு நடவடிக்கையினை மேற்கொண்டவர்களுக்கு உத்தரவிட்டார் .
குறித்த பகுதியானது அரசாங்கத்திற்கு சொந்தமானது எனவும் குறித்த பகுதியில் எந்த நடவடிக்கையினையும் முன்னெடுக்க வேண்டாம் எனவும் இதன்போது பிரதேச செயலாளர் வேலியடைப்பில் ஈடுபட்டவர்களுக்கு உத்தரவிட்டார்.
அப்பகுதியானது அரசகாணியாகவும் வடிச்சல் பகுதியாகவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சிலர் போலியான ஆவணங்களைக்கொண்டுவந்து பொலிஸாரின் ஆதரவுடன் குறித்த பகுதியை அபகரிக்க முனைகின்றதாக அவர் தெரிவித்தார்.
மேலும்எதிர்வரும் காலத்தில் குறித்த பகுதியில் மாநகரசபையினால் விசேட வேலைத்திட்டத்தினை முன்னெடுத்து பாதுகாக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாநகர மேயர் திரு.சரவணபவன் தெரிவித்தார்.