பேரிடர் நிவாரணம் – மோசடியாளர்கள் குறித்து அவதானம் தேவை

பேரிடர் நிவாரணம் வழங்குவதாக கூறும் மோசடிக்காரர்களிடம் இருந்து அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு அறிக்கையொன்றை வௌியிட்டு இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.
டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதாகக்கூறி, பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தனிப்பட்ட தகவல்களை சில மோசடிக்காரர்கள் சமூக வலைத்தளங்கள் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பி பெறும் சம்பவங்கள் கண்காணிக்கப்பட்டுள்ளன.
பேரிடருக்குப் பின்னரான நிவாரண செயற்பாடுகளுக்கான தகவல் சேகரிப்பானது அமைச்சுடன் இணைந்த கள அலுவலர்கள் மற்றும் கிராம சேவகர்களுடன் இணைந்து மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக மாத்திரமே இடம்பெறுவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே பொதுமக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் தமது தனிப்பட்ட தகவல்களை மோசடிக்காரர்களிடம் பகிர்வதை தவிர்க்குமாறும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.



