திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட காணி வீடற்ற இளம் குடும்பமொன்றிற்கு வீடொன்று அமைத்து கொடுக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது இன்று …..

வி.சுகிர்தகுமார்
திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மிகவும் பின்தங்கிய மண்டானை கிராமத்தில் காணி வீடற்ற இளம் குடும்பமொன்றிற்கு கனடாவைச் சேர்ந்த கா.யோகானந்தம் குழவினரது 3 இலட்சம் ரூபா நிதி ஏற்பாட்டில் வீடொன்று அமைத்து கொடுக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது.
திருக்கோவில் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்ற வீடு கையளிக்கும் நிகழ்வில் கனடாவைச் சேர்ந்த கா.யோகானந்தம் குழவினரது சார்பில் அம்பாரை மாவட்ட மனிதாபிமான குழுமத்தின் தொடர்பாளரும் அபிவிருத்தி உத்தியோகத்தருமான தி.சின்னத்தம்பி கலந்து கொண்டதுடன் பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் அனோஜா, கிராம சேவை உத்தியோகத்தருக்கான நிருவாக உத்தியோகத்தர் பரிமளவாணி சில்வெஸ்டர் பிரதேச செயலக வெளிநாட்டு வேலைவாய்ப்பு உத்தியோகத்தர் க.தயாபாரன் கிராம உத்தியோகத்தர் சடாட்சரன், பொருளாதார உத்தியோகத்தர் சிவலோகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் இறைவணக்கத்தை தொடர்ந்து பிரதேச செயலாளர் உள்ளிட்டவர்களினால் நாடா வெட்டி வீடு திறந்து வைக்கப்பட்டதுடன் பயனாளியிடம் திறவுகோல் கையளிக்கப்பட்டது.
இதற்காக கனடாவாழ் எமது உறவுகள் 230000.00 நிதியினை ஒதுக்கீடு செய்திருந்தனர்.
திருக்கோயில் பிரதேச செயலாளரின் காணி அற்றோருக்கான காணி வழங்கும் மனிதாபிமான செயற்றிட்டத்திற்கு அமைவாக திருக்கோயில் மண்டானையில் இவர் களுக்கான காணி வழங்கப்பட்டு அவரது கரங்களினால் வீடு அடிக்கல் நாட்டுதல் முதற்கொண்டு வீடு திறந்து வைத்தல் முதலான அனைத்து காரியங்களும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
2020.06.12ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இவ்வேலைத்திட்டம் 2020.07.03ம் திகதி முடிவுக்கு வந்தது.
கொரனா வேளையில் நிவாரணப் பணிக்காக மண்டானை சென்றிருந்த வேளை இவர்களின் துயர் கண்டு புலம் பெயர் உறவுகளிடம் விடுத்த கோரிக்கை வீணாகாமல் அவர்களின் உழைப்பின் பயனாய் ஒரு குடும்பத்தில் புதிய தீபம் ஏற்றப்பட்டுள்ளது.
இதன் போது பலர் பல உதவிகளை மேற்கொண்ட போதிலும் குட்டி, லிபோசன் ஆகியோர் அன்னளவாக 25000.00ரூபா பெறுமதியான ஓடாவி வேலைகளையும் இலவசமாக செய்து கொடுத்திருந்தனர்.
குறித்த குடும்பத்தின் அவல நிலை தொடர்பில் கருத்திற் கொண்ட பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் அரச காணியொன்றின் துண்டொன்றை குறித்த குடும்பத்திற்கு வழங்கியதுடன் வீடு அமைப்பதற்கான சிபாரிசினையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.