இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை – சீனர்களுக்கு பயணத்தடை?

ஆசிய நாடுகளில் பரவி வரும் நிமோனியா வைரஸ் இலங்கையை தாக்கும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வைரஸ் தாக்கம் அதிகரிக்குமாயின் நிலைமையை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர விமான நிலையத்திலும் வைத்தியசாலைகளிலும் ஒரு அவசர திட்டத்தை செயல்படுத்துவதற்கு தயார் எனவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் நோய் பரவுவதை தடுக்கும் நோக்கில் சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு தடைவிதிக்கப்படலாம் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் நிமோனியா வைரஸ் தாக்கம் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு, மற்றும் ஆசிய நாடுகள் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றன.
சீனாவின் வுஹான் மாகாணத்தில் நிமோனியா வைரஸ் தாக்கம் ஏற்பட்டதாக கண்டரியப்பட்டதை தொடர்ந்து உலக சுகாதார அமைப்பு, சீனா சுகாதார அமைச்சினை எச்சரித்துள்ளது.
அத்துடன் வைரஸ் தாக்கத்திற்கான சரியான காரணத்தை சீன அதிகாரிகள் விசாரித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
இதுவரை வுஹான் மாகாணத்தில் நிமோனியா தாக்கத்திற்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் 44 பேர் வரை கண்டரியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு ஏனைய நாடுகளை ஏச்சரித்துள்ளது.
அதில் 11 பேர் கடுமையான நோய் தாக்கத்திற்கு உள்ளானவர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். வுஹான் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள நிமோனியா வைரஸ் தாக்கமானது ஆசியா முழுவதும் விழிப்பூட்டல்களை ஏற்படுத்தியுள்ளது.
முக்கியமாக சீனா மற்றும் ஹொங் கொங், சிங்கப்பூர், மலேசியா, தைவான், தென் கொரியா ஆகிய நாடுகளின் விமான நிலையங்கள், நாட்டின் எல்லைகள் மற்றும் பொது இடங்களில் கடுமையான சுகாதார கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியுள்ளன.
இதுவரை வந்த அறிக்கைகள் நிமோனியா ஒரு அரிய வைரஸ் அல்லது முன்னர் அறியப்படாத ஒரு நோய்க்கிருமியால் ஏற்படக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு ஒரு வாரத்தின் பின்பே நோய்தொற்று அறிகுறிகள் வெளிபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.