கிழக்கு ஆளுநர் முன்னிலையில் கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை திறப்பு….

வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் ஆடிவேல் விழா உற்சவத்தையொட்டிய கதிர்காமத்துக்கான காட்டுப்பாதை இன்று (12) திங்கட்கிழமை கழுகுமலை பத்து பாடி திறந்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் முன்னிலையில் காலை 7.30 மணியளவில் பாதை திறக்கப்பட்டது.
இம் முறை காட்டுப்பாதையூடாக சுமார் 45 ஆயிரம் பக்தர்கள் பாதயாத்திரையை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று காலை 5.30 மணிக்கு உகந்தை மலை முருகன் ஆலயத்தில் பிரதம குரு சிவசிறி க.கு. சீதாராம் குருக்கள் விசேட பூஜை நடாத்தி ஆசியுரை வழங்கினார்.
அதைத் தொடர்ந்து காலை 7 மணியளவில் காட்டுப் பாதை திறக்கப்பட்டது.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் , அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜெ.என்.டக்ளஸ், மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன், லாகுகலை பிரதேச செயலாளர் என்.நவநீதராஜா ,மொனராகலை மாவட்ட அரசாங்கஅதிபர் ,ஆலய வண்ணக்கர் சுதுநிலமே திஸாநாயக்க உள்ளிட்ட யாத்தியர்கள் பல அன்பர்கள் கலந்து கொண்டார்கள்.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் அனிருத்தனின் ஆலோசனைக்கமைவாக மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி ஆகியோரின் ஏற்பாட்டில்
காட்டுப் பாதை திறந்து வைக்கப்பட்டது.
முதல் நாளிலேயே சுமார் 2000 பாதயாத்திரீகர்கள் பயணித்தனர்.
யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து ஆரம்பித்த ஜெயா வேல்சாமி தலைமையிலான மிகநீண்ட பாதயாத்திரை அடியார்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்டார்கள்.
கதிர்காம காட்டுப் பாதை மொத்தம் 56 மைல்கள் ஆகும்.
சுமார் 6 நாட்கள் இந்த பயணத்தை அடியார்கள் மேற்கொள்வது வழமை.
இன்று திறக்கப்பட்ட காட்டுப்பாதை இம் மாதம் 25 ஆம் தேதி மூடப்படுகிறது. கதிர்காம கொடியேற்றம் எதிர்வரும்19 ஆம் திகதி நடைபெற உள்ளது. யூலை மாதம் 04ஆம் திகதி தீர்த்தம் இடம் பெறும் .
கதிர்காமப் பாதயாத்திரை அகத்திய முனிவர் தொடக்கி அருணகிரியார் ஈறாகவும், யோகர் சுவாமி முதற்கொண்டு சித்தானைக்குட்டி வரை எண்ணிறைந்த சித்தர் பெருமக்கள் இன்றுவரை தம் பாதக் கமலங்களை பதித்து பவனி சென்ற பாதையில் வருடாவருடம் நாமும் பயணிக்கின்றோம். “ஷேத்திராடனம்” எனும் நூலில் கூறப்பட்டுள்ளது.