கவனக்குறைவால் உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை: கல்முனையில் சம்பவம்

கவனக்குறைவால் உடல் வலிக்கு தடவும் தைலத்தை அருந்தி ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் கல்முனையை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வெல்லாவெளி- தம்பலாவத்தை பகுதியில் கடந்த புதன்கிழமை மாலை வேளை, பெரியவர்கள் உடல் வலிக்கு பயன்படுத்தும் தைலத்தை அருந்தியதால் மயக்க நிலை அடைந்த குழந்தையை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் உறவினர்கள் அனுமதித்துள்ளனர்.
பின்னர் குறித்த குழந்தையை மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்து சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில், நேற்று ( வெள்ளிக்கிழமை) இரவு உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சம்பவத்தில் ஹரிகரன் துசேன் எனும் 1 வயதும் 8 மாதமுடைய சிறுவனே உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் தம்பலாவத்தை பிரதேசத்தை சேர்ந்த குறித்த சிறுவனின் தந்தை பணி நிமிர்த்தம் வளைகுடா நாடு ஒன்றில் பணி புரிந்து வருகின்றார் .
சிறுவனின் தாயார் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை அன்றைய தினம் உறவினர்களின் பராமரிப்பில் இருந்த சந்தர்ப்பத்தில் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



