இலங்கை

அரசியல் தீர்வு கிடைத்தாலே அபிவிருத்தியைக் காணலாம் திருமலையில் சம்பந்தன் தெரிவிப்பு 


“அரசியல் தீர்வு கிடைத்தால் மாத்திரமே அபிவிருத்தியை நோக்கிச் செல்ல முடியும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

திருகோணமலை மின்சார நிலைய வீதியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்தக் கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  எவ்விதமான அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை என மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது எனக் கூட்டமைப்பின் தலைவரிடம் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் தெரியப்படுத்தியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஒவ்வொரு உள்ளூராட்சி சபைகளிலும் உறுப்பினர்களாகச் செயற்பட்டு வருகின்றவர்கள் மக்களுக்குத் தேர்தல் பற்றிய விடயங்களைத் தெரியப்படுத்துவதுடன், தெளிவுபடுத்தவும் வேண்டும்.

அரசியல் தீர்வு கிடைத்தால் மாத்திரமே அபிவிருத்தியை நோக்கிச் செல்ல முடியும் என்று மக்களுக்குத் தெளிவூட்ட வேண்டும்.

இம்முறை ஒரு வித்தியாசமான தேர்தலாக இருப்பதால் தமிழ் மக்களுடைய வாக்குகளைச் சிதறடிக்காமல் அனைத்து தமிழ் பேசும் மக்களும் வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்க உரிய வழிமுறைகளை அமைத்துக் கொடுக்க வேண்டும். மற்றக் கட்சிகளுக்கு வாக்களித்து தமிழ் மக்களுடைய வாக்குகளைச் சிதறடிக்காமல் ஒரு தாய் பெற்ற பிள்ளைகள் போல் செயற்பட வேண்டும். இதை மக்களிடம் தெளிவாகக் கூறுங்கள்” – என்றார்.

இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள், திருகோணமலை நகர சபையின் தலைவர் இராஜநாயகம், திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் தவிசாளர் கலாநிதி டாக்டர் ஞானகுணாளன் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker