இலங்கை

அக்கரைப்பற்று பிரதேசத்தில் முடக்கப்பட்டிருந்த பகுதி விடுவிக்கப்பட்டது!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அக்கரைப்பற்று பிரதேசத்தில் முடக்கப்பட்டிருந்த ஒரு பகுதி மூன்று வாரங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசம் இன்று (புதன்கிழமை) விடுவிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சுகுணன் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானமை அடையாளப்படுத்தப்பட்டு குறித்த நபர்கள் வசித்து வந்த பிரதேசம் முடக்கிவைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளான நபர்கள் வசித்துவந்த சுமார் 500 மீற்றர் வரையாலான சுற்றுவட்டாரம் மூன்று வாரங்களுக்கு முடக்கப்பட்டிருந்தது.

இப்பிரதேசத்தில் வசித்துவந்த சுமார் 320 குடும்பங்களைச் சேர்ந்த 900 பேர் வெளிச்செல்ல அனுமதிக்கப்படவில்லை. அத்துடன் குறித்த பிரதேசத்துக்கு வெளிப் பிரதேசத்திலிருந்து வருகைதரும் எவரும் பிரதேசத்தினுள் அனுமதிக்கப்படவுமில்லை.

இப்பிரதேசத்தில் வசித்துவந்த கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்ட இருவர் வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர்கள் இருவரும் சுகம் பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

இவர்களுடன் நேரடி மற்றும் இரண்டாம் நிலை தொடர்புகளைப் பேணியவர்கள் என இனங்காணப்பட்ட சுமார் 75 பேர் பொலன்னறுவை தம்மின்ன தனிமைப்படுத்தல் நிலையத்தில் தமது தனிமைப்படுத்தல் காலத்தை பூர்த்திசெய்து மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் நோய்த் தொற்று இல்லையென அடையாளம் காணப்பட்டதனைத் தொடர்ந்து நேற்று இவர்கள் தத்தமது வீடுகளுக்குத் திரும்பினர்.

எனவே, அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் இந்நோய் தொடர்பாக தேவையற்ற அச்சம் கொள்ளத்தேவையில்லை. ஏனைய பிரதேச பொதுமக்கள் போல் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மக்கள் செயற்படவேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker