ஆலம் விழுதுகள் அமைப்பானது திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமைத்துவம் தாங்கும் 100 குடும்பங்களுக்கான வீட்டுத்தோட்ட பயிர்கன்றுகளை இன்று வழங்கி வைத்து

வி.சுகிர்தகுமார்
அரசாங்கத்தின் சௌபாக்கியா வீட்டுத்தோட்ட மரநடுகை பசுமைப்புரட்சி
வேலைத்திட்டத்திற்கு இணைவாக தனியார் தொண்டு அமைப்புக்களும்
வீட்டுத்தோட்டத்தினை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
இதற்கமைவாக அம்பாரை மாவட்ட ஆலம் விழுதுகள் அமைப்பானது கனடா உதவி அமைப்பின்
நிதியுதவியுடன் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பெண்
தலைமைத்துவம் தாங்கும் 100 குடும்பங்களுக்கான வீட்டுத்தோட்ட பயிர்கன்றுகளையும்
நாற்றுக்களையும் இன்று வழங்கி வைத்து மரநடுகை திட்டத்தையும் ஆரம்பித்து
வைத்ததுடன் பொதுமக்களை ஊக்கவிக்கும் முகமாக நிவாரணத்தையும் வழங்கி வைத்தது.
அம்பாரை மாவட்டத்தில் ஆலம் விழுதுகள் அமைப்பானது தனது பணியை ஆரம்பித்துள்ள
நிலையில் இரண்டாவது அங்குரார்ப்பண நிகழ்வை திருக்கோவில் திருநாவுக்கரசு
நாயனார் குருகுல மண்டபத்தில் இன்று நடாத்தியது.
அமைப்பின் தலைவர் க.கணேஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண சபை
பேரவைச் செயலாளர் என்.கோபாலரெத்தினம் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன்
திருக்கோவில் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் விசேட அதிதியாக கலந்து கொண்டார்.
நிகழ்வில் ஆலம் விழுதுகள் அமைப்பின் அம்பாரை மாவட்ட இணைப்பாளரும்
உதவிக்கல்விப்பணிப்பாளருமான எஸ்.ஸ்ரீதரன், அமைப்பின் உறுப்பினர் ஊடகவியலாளர்
வி.சுகிர்தகுமார், பிரதேச செயலக கிராம உத்தியோகத்தருக்கான நிருவாக
உத்தியோகத்தர் சில்வெஸ்டர் பரிமளவாணி, சிரேஸ்ட கிராம உத்தியோகத்தர் கண
இராஜரெத்தினம், சிரேஸ்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் க.மோகனராஜா உள்ளிட்ட
உயர் அதிகாரிகள் அமைப்பின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
சிறந்த வீட்டுத்தோட்டத்தின் மூலம் பல்வேறு பரிசில்களை வென்றெடுப்பதுடன்
விவசாயம் எனும் பசுமைப்புரட்சியை ஏற்படுத்தி காட்டுவோம் எனும் நோக்கோடு
திருக்கோவில் பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டமானது விரைவில்
அம்பாரை மாவட்டம் முழுவதுமாக விஸ்தரிக்கப்படவுள்ளமையும் இங்கு
குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் கலந்து கொண்ட பயனாளிகளுக்கு கத்தரி கொச்சி போன்ற வீட்டுத்தோட்ட
பயிர்கன்றுகளும் பல்வேறு விதைகளும் நிவாரணமும் வழங்கி வைக்கப்பட்டதுடன்
அதிதிகள் மரக்கன்கன்றுகளையும் நாட்டி வைத்தனர்.
இங்கு கருத்து தெரிவித்த மாகாண சபை பேரவைச் செயலாளர் என்.கோபாலரெத்தினம் ஆலம்
விழுதுகள் அமைப்பின் பணியை பாராட்டுவதுடன் தாம் எதிர்பார்த்த திட்டத்தை
அமுல்படுத்தியமையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார். மேலும்
எதிர்காலத்திலும் குறித்த அமைப்பினரின் பணிக்கு தமது பூரண ஒத்துழைப்பபை
வழங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.