இலங்கை

உகந்தைமலை முருகன் ஆலய வருடாந்த உற்சவம்- அம்பாரை மாவட்ட பக்தர்களுக்கு மாத்திரமே அனுமதி: அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன்

வி.சுகிர்தகுமார்

 வரலாற்று சிறப்புமிக்க உகந்தைமலை முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டதான தீர்மானங்களை மேற்கொள்ளும் கலந்துரையாடல் லாகுகல பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

பிரதேச செயலாளர் சந்துருவன் அனுருத்த பியதாச தலைமையில் சமய வழிபாடுகளுடன் ஆரம்பமான கலந்துரையாடலில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் கலந்து கொண்டு கலந்துரையாடலின் பின்னரான தீர்மானங்களை அறிவித்தார்.

எதிர்வரும் ஜுலை மாதம் 21ஆம் திகதி ஆரம்பமாகும் உற்சவமானது ஆகஸ்ட் மாதம் 04ஆம் திகதியுடன் நிறைவறுகின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக ஆலய உற்சவமானது சுகாதார துறையினரின் அறிவுறுத்தலுக்கமைய மேற்கொள்ளப்படவுள்ளதாக இங்கு அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசனால் சுட்டிக்காட்டப்பட்டது.

இதன் பிரகாரம் 50பேர் கொண்ட நான்கு குழுக்கள் மாத்திரம்  ஒரு நாளிலே வழிபாட்டிலே கலந்து கொள்ள முடியும் என தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது.

இவ்வாறு கலந்து கொள்கின்றவர்கள் தங்களது பெயர் விபரங்களை அவர்களது பகுதிக்கு பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரியின் சிபாரிசுடன் ஆலய நிருவாகத்தினருக்கு முன்கூட்டியே அனுப்பி வைக்கவேண்டும்.

அவ்வாறு கிடைக்கப்பெறும் பெயர் விபரங்கள் ஆலயத்திற்கு பொறுப்பாக இருக்கும் சுகாதார வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும் அதேநேரம் ஆலயத்தினுள் உள்நுழைபவர்களை பரிசோதனை செய்யும் நடவடிக்கையினை கடற்படையினர் மேற்கொள்வர் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதேநேரம் ஆலயத்திற்குள் ஒரு தடவையில் 50 பேர் மாத்திரம் சென்று வழிபாட்டில் ஈடுபடமுடியும். அவர்கள் வெளியேறிய பின்னர் ஏனைய 50பேர் உள்ளே அனுமதிக்கப்படுவர்.

ஆயினும் வேறு மாவட்டத்தை சார்ந்த மக்களுக்கு அனுமதியில்லை என்பதுடன் அம்பாரை மாவட்டத்தை சேர்ந்த பக்தர்களுக்கு மாத்திரமே இவ்வாறு அனுமதியளிக்கப்படும் எனவும் கூறப்பட்டது.

எவ்;வாறாயினும் பாரம்பரியமாக நடைபெறும் பாதயாத்திரை ஜனாதிபதியின் அறிவறுத்தலுக்கமைய நாட்டில் கொரோன பரவலை கட்டுப்படுத்தும் முகமாக  இவ்வருடம் இடம்பெறாது எனவும் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டது.

நாட்டில் சீரான நிலை ஏற்படும் பட்சத்தில் அடுத்த வருடம் பாதயாத்திரை இடம்பெறும் எனவும் அவ்வாறான சந்தர்ப்பத்தில் மக்கள் தங்களது நேர்த்திகளை நிறைவேற்ற முடியும் எனவும் கூறப்பட்டது.

மேலும் வழமைபோன்று ஆலயத்திற்கு வருகை தரும் அடியவர்களுக்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் சமயத்தலைவர்கள் அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் லாகுகல பொத்துவில் திருக்கோவில் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர்கள் செயலக அதிகாரிகள் சுகாதார துறையினர் பாதுகாப்பு படையினர் என பலரும் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker