இலங்கை

பௌத்த விகாரைகளுக்குள் இந்துக்கோயில்கள்! தொல்பொருள் அதிகாரியின் சர்ச்சைக்குரிய கருத்து

தொல்பொருள் இடங்களைக் கண்டறிந்து அகழ்வு பணிகளை மேற்கொள்வதில் தெற்கினைப் போன்றே வடக்கு, கிழக்கினையும் அணுகுவதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பேராசிரியர் அநுர மனதுங்க தெரிவித்தார்.

அத்தோடு, தென்னிலங்கையில் பௌத்த விகாரைகளுக்குள் இந்துக்கோயில்கள் உள்ளன என்றும் குறிப்பிட்ட இனத்தினையோ மதத்தினையோ இலக்கு வைத்து தொல்பொருள் அகழ்வுகளை முன்னெடுக்கவில்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த விடயம் குறித்து ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பேராசிரியர் அநுர மனதுங்க, இந்த நாட்டின் வரலாற்றுத் தொன்மம் வாய்ந்த பகுதிகளை அடையாளம் காணலும் முறையாக பாதுகாத்தலுமே தொல்பொருள் திணைக்களத்தின் பிரதான பணியென்றும் குறிப்பிட்டார்.

அப்பகுதிகளில் இருந்து மீட்கப்படும் பொருட்களை பாதுகாத்து வரலாற்றுத் தொன்மங்களை அழிவுறாது பேணுவதே தமது கடமையென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அந்தப் பணியையே தாம் முன்னெடுத்து வருவதாகவும் இதில் எவ்விதமான இன, மத ரீதியான பாகுபாட்டினைக் காண்பிக்கவில்லை என்றும் விளக்கமளித்தார்.

தெற்கில் எவ்வாறு புராதனப் பகுதிகளைப் பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோமோ அதேபோன்றுதான் வடக்கிலும் கிழக்கிலும் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கு, கிழக்கில் காணப்பட்ட அசாதாரண நிலைமைகளால் அங்குள்ள தொல்பொருள் பகுதிகள் பாதுகாக்கப்பட்டிருக்கவில்லை என்றும் தற்போது அதற்காக விசேட நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.

மேலும் கோயில்களில் தொல்பொருட்களை அடையாளப்படுத்துவதற்கான முயற்சிகள் ஒரு மதத்தினை இலக்குவைத்த நடவடிக்கை அல்ல எனத் தெரிவித்த பணிப்பாளர், தென்னிலங்கையில் பௌத்த விகாரைகளுக்குள் இந்துக்கோயில்கள் உள்ளன என குறிப்பிட்டார்.

எனவே தொல்பொருளியல் செயற்பாடு தொடர்பாக தவறான புரிதலை வடக்கு கிழக்கு சமூகத்தினர் விடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker