கொவிட் முகாமைத்துவத்தில் இலங்கைக்கு 10 ஆவது இடம்


அவுஸ்திரேலிய கல்வி நிறுவனமான ´லோவி´ நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புக்கு அமைய இந்த தகவல் வௌியாகியுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
98 நாடுகளை பயன்படுத்தி இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் இலங்கைக்கு 10 ஆவது இடம் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், நியுசிலாந்து முதலிடத்தை பெற்றுள்ளது.
இரண்டாம் இடம் வியட்நாமிற்கும், மூன்றாம் இடம் தாய்வானுக்கும், நான்காம் இடம் தாய்லாந்திற்கும் வழங்கப்பட்டுள்ளன.
குறித்த கணக்கெடுப்பிற்காக ஒவ்வொரு நாட்டிலும் உறுதிப்படுத்தப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை, உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் மரணங்கள் மற்றும் மேற்கொள்ளப்படும் கொரொனா பரிசோதனைகளின் திறன் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த கணக்கெடுப்பில் இந்தியா 86 ஆவது இடத்தை பெற்றுள்ளது.
எவ்வாறாயினும், குறித்த கணக்கெடுப்பிற்கு சீனாவை இணைத்துக் கொள்ளவில்லை என லோவி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீன அரசாங்கத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட தரவுகள் உரிய வகையில் பெற்றுக் கொடுக்கப்படாமை இதற்கான காரணம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெரிய நாடுகளை விட சிறிய நாடுகள் கொவிட் பரவலை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.