மூன்றாவது ஒருநாள் போட்டியில் சிம்பாப்வேயை எளிதாக வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை அணி!

சிம்பாப்வே அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி 184 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில், இலங்கை கிரிக்கெட் அணி கைப்பற்றியுள்ளது.
பல்லேகல மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 254 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பெத்தும் நிஸங்க 55 ஓட்டங்களையும் சரித் அசலங்க 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
சிம்பாப்வே அணியின் பந்துவீச்சில், ங்கறவ 2 விக்கெட்டுகளையும் சடாரா, முஸரபானி, மஸகட்சா மற்றும் ரியான் பர்ல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 255 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய சிம்பாப்வே அணி, 70 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், இலங்கை கிரிக்கெட் அணி 184 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கைடானோ 19 ஓட்டங்களையும் ரியான் பர்ல் 15 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 56 பந்துகளில் 5 பவுண்ரிகள் அடங்களாக 52 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட சரித் அசலங்க தெரிவுசெய்யப்பட்டார். தொடரின் நாயகனாக பெத்தும் நிஸங்க தெரிவுசெய்யப்பட்டார்.