இலங்கை

பொத்துவில் – பொலிகண்டிப் போராட்டம் தமிழர் வரலாற்றில் மைல்கல் வெற்றி- தேசிய பண்பாட்டுப் பேரவை

தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்ட பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரெழிச்சிப் போராட்டம் தமிழர் வரலாற்றில் மீண்டும் ஒரு மைல்கல் வெற்றியை உருவாக்கியுள்ளது என தமிழ் தேசியப் பண்பாட்டுப் பேரவை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பண்பாட்டுப் பேரவை குறிப்பிடுகையில், “வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், பொத்துவில் முதல் பொலிகண்டி வரையுள்ள எட்டு மாவட்டங்களிலும் சுமார் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் தன்னெழிச்சியாகவும் உணர்வுபூர்வமாகவும் பங்கெடுத்தார்கள் என்பது ஒரு மாபெரும் வரலாற்று வெற்றியாகும்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்தில் வடக்கு கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் பூரண ஒத்துழைப்பும் களச்செயற்பாடுகளும் அவர்கள் தமிழ் தேசியத்தின் மீது கொண்ட பற்றுறுதியும் பாராட்டத்தக்கதே.

இதேபோல், வடக்கு கிழக்கில் உள்ள சமூகமட்டச் செயற்பாட்டு அமைப்புக்கள், தமிழ் தேசியத்திற்கான சிவில் அமைப்புக்களினதும் ஆதரவும் ஒத்துழைப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததே. மேலும், இந்தப்போராட்டத்தில் சிங்களப் பேரினவதிகளால் ஏற்படுத்தப்பட்ட அனைத்துத் தடைகளையும் முன்னின்று தகர்த்து வடகிழக்கு சிவில் சமூகத்தின் இப்போராட்டத்தை மேலும் வலுவடையச் செய்த பெருமை தமிழ் தேசியப் பரப்பில் தமிழ் தேசியத்தின் மீது விசுவாசமாகச் செயற்படும் அனைத்து தமிழ் தேசியக் கட்சிகளையே சாரும். இதைவிட இந்தப் போராட்டத்தில் பல நாடாளுமன்ற உறுப்பினர்களினது செயற்பாடுகள் மிகவும் பாராட்டத்தக்கதே.

இந்தப் போராட்டமானது இன்று தாயகம் தாண்டி சர்வதேசம் வரை சென்றிருக்கின்றது என்றால் வடக்கு கிழக்கில் வாழும் எமது அனைத்து இளைஞர்கள், யுவதிகள் மற்றும் பொதுமக்களையே சாரும். மேலும், இந்தப் போராட்டத்தைச் சமூக வலைத்தளங்களின் ஊடாக அனைவரிடமும் கொண்டு சேர்த்த பெருமை சமூக வலைத்தளப் போராளிகளையே சாரும்.

இதிலும், தமிழ் தேசியத்தின் பாதையில் தடம் மாறாமல் பயணித்த ஊடகவியலாளர்களின் பணிகள் மேச்சத்தக்கதே. அதேபோல், போராட்டத்திற்கு ஆதரவாக சர்வதேசத்தில் இருந்து எமக்கான ஒத்துழைப்புக்களையும் புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளில் வாகனப் பேரணிகளையும், போராட்டங்களையும் ஏற்பாடு செய்து நடத்திய புலம்பெயர் தமிழ் சமூகத்தின் பங்கு என்பது மிகவும் பாராட்டத்தக்கதே.

இந்த, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரெழிச்சிப் போராட்டத்தை முன்னின்று வழிநடத்தி வெற்றியடையச் செய்த வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்களின் மதகுருமாருக்கும் ஏனைய பிரதிநிதிகளுக்கும் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அத்தோடு, வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்களின் தமிழ் தேசியத்திற்கான பணி நின்றுவிடாமல் தொடர்ச்சியாகப் பயணிக்க வேண்டும். இப்போராட்டத்தில் தன்னெழுச்சியாகக் கலந்துகொண்டு ஆதரவளித்து, உங்கள் தார்மீகக் கடமையை நிறைவேற்றிய அனைத்து உறவுகளுக்கும் தமிழ் தேசியப் பண்பாட்டுப் பேரவை நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு தொடர்ந்தும் இதேபோல் தமிழ் தேசியப் பண்பாட்டுப் பேரவை உங்களோடு பயணிக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker