இலங்கை

தேர்தல் பிற்போகலாம்; நாடாளுமன்றம் கூடாது – எதிர்க்கட்சிகளின் மிரட்டல் கோரிக்கைக்கு அடிபணியத் தயாரில்லை என்கிறார் மஹிந்த

“இரு வாரங்களில் நாடு சுமுகமான நிலைக்கு வராவிடின் ஜூன் 20ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவது சந்தேகம். சிலவேளை தேர்தல் பின்னுக்குப் போகக்கூடும். அதற்காகப் பழைய நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஒருபோதும் கூட்டவேமாட்டார். பொதுத்தேர்தல் இடம்பெற்ற பின்னர் புதிய நாடாளுமன்றத்தைத்தான் அவர் கூட்டுவார்.”

– இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீளக் கூட்ட வேண்டுமென எதிரணியிலுள்ள கட்சிகள் பல ஒன்றிணைந்து, ஜனாதிபதியிடம் கூட்டு யோசனையொன்றைக் கையளித்துள்ளன. இதில், மீண்டும் நாடாளுமன்றம் கூட்டப்பட்டால் அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்றும், தமது மாதக் கொடுப்பனவுகள்கூட வேண்டாம் என்றும் உத்தரவாதமளித்துள்ளனர். அத்துடன், எந்தச் சந்தர்ப்பத்திலும் அரசைக் கவிழ்க்க மாட்டோம் என்றும் எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

இவ்வாறானதொரு நிலையில் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் மஹிந்த மேலும் கூறியுள்ளதாவது:-

“கலைக்கப்பட்ட நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட – பழைய நாடாளுமன்றமாகவே இருக்கும். அரசமைப்பின் பரிந்துரைகளைக் கருத்தில்கொண்டே நான்கரை வருடங்களில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. எனவே, எதிர்க்கட்சிகளின் மிரட்டல் கோரிக்கைக்கு அடிபணிந்து பழைய நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு ஜனாதிபதி தயாரில்லை. அதேவேளை, நாடாளுமன்றம் மீளக் கூட்டப்பட்டால் அரசு கவிழ்ந்துவிடும் என்ற அச்சமும் ஜனாதிபதிக்கு இல்லை. எதிரணியினர் அப்படி நினைப்பது படுமுட்டாள்தனமானது. நாடாளுமன்றத் தேர்தல் எப்போது நடக்கும் என்று இப்போது உறுதியாகக் கூற முடியாது. ஏனெனில், இந்த நாட்டிலிருந்து கொரோனா வைரஸை முற்றாக இல்லாதொழிப்பதே எமது நோக்கம். அதன்பின்னர்தான் தேர்தல் நடக்கும். அதன்பின்னர்தான் புதிய நாடாளுமன்றமும் கூடும். அதுவரைக்கும் இந்த நாட்டைக் கொண்டு நடத்துவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது” – என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker