நாவிதன்வெளி பிரதேச செயலாளரின் தன்னிச்சையான நடவடிக்கைக்கு எதிர்ப்பு!

நாவிதன்வெளி பிரதேச செயலாளர் அண்மைக்காலமாக அரசியல்வாதிகளை ஓரம் கட்டி செயற்படுவதாக நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர்.
அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் தவராசா கலையரசன் தலைமையில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்றது.
இதன்போது பிரதேசத்தில்வரும் அபிவிருத்திகள் மேற்கொள்ளும் போது பிரதேச செயலகம் ஒருதலைப்பட்சமாக செயற்படுவதாகவும், பொது விழாக்கள், மகளிர் தினம் போன்றவற்றில் பிரதேச பெண் உறுப்பினர்கள் ஓரங்கட்டப்பட்டுவருவதாக கவலை வெளியிட்டனர்.
பிரதேச செயலங்களினூடாக மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் பிரதேச செயலகத்தின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டிருந்தன என்றும் பராமரிப்பிற்காக பிரதேச சபையிற்கு ஒப்படைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறினர்.
மேலும் பிரதேச செயலகத்தினூடாக மேற்கொள்ளப்படும் வீதி போன்ற அபிவிருத்தி பணிகள் கடந்த ஆட்சிக்காலத்தில் பிரதேச செயலகத்தின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.