மஹிந்தவால் தலைகுனிந்து நிற்க வேண்டிய நிலைமை! UNP

பிரதமர் மஹிந்த ராஜபக்ச இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது எமது நாட்டின் சர்வதேச கடனை மீளச் செலுத்த இந்தியா உதவ வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் விடுத்த வேண்டுகோளால் எமது நாட்டுக்குப் பெரும் தலைக்குனிவு ஏற்பட்டுள்ளது என UNP யின் பாரளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தெரிவித்தார்.
UNPயின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது:-
“பிரதமர் மஹிந்த ராஜபக்ச இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது தன்னுடன் மேலும் பலரை அழைத்துச் சென்றிருந்தார். இந்தியாவுக்குச் சென்று யாத்திரையிலும் ஈடுபட்டார்.
மஹிந்த ராஜபக்சவின் இவ்வாறான விஜயத்தால் பாரிய செலவும் ஏற்பட்டுள்ளன. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இவ்வாறான கட்டாய விஜயம் அவசியமானதா?
இதேவேளை, நாட்டின் சர்வதேச கடனை செலுத்துவதற்காக தமக்கு உதவுமாறு இந்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கவே மஹிந்த அங்கு சென்றிருந்தார். இது தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தியுள்ளது.
எமது வீட்டிலுள்ள பிரச்சினைகளை அயல் வீட்டுக்குத் தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற மனோபாவத்தைக் கொண்டுள்ள எமது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற வகையில், மஹிந்தவின் செயற்பாட்டால் நாட்டுக்குப் பெரும் தலைக்குனிவு ஏற்பட்டுள்ளது என்றார்.