இலங்கை
கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்த தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்
எதிர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த கொழும்பு நகரில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. காலி முகத்திடலுக்கு அருகில் ஒரு இடத்தில் பெயர் பலகை வைத்து இந்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டம் நடத்த தனியான இடங்களை ஒதுக்க கடந்த நல்லாட்சி அரசாங்கம் ஒரு யோசனையை கொண்டு வந்து நிறைவேற்றியது. எனினும் அன்றைய எதிர்க்கட்சியான கூட்டு எதிர்க்கட்சியினர் இந்த யோசனைக்கு கடுமையான எதிர்ப்பினை முன்வைத்தனர். நல்லாட்சி அரசாங்கம் மக்கள் போராட்டங்களை அடக்க முயற்சிப்பதாக குற்றம் சுமத்தினர்.
இதனால், நல்லாட்சி அரசாங்கம் குறித்த யோசனையை கிடப்பில் போட்டது. தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து சில மாதங்களிலேயே ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான இடத்தை ஒதுக்கியுள்ளது.
இந்த இடத்தை தவிர வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் அல்லது எதிர்ப்புகளில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் யோசனைகள் கொண்டு வரப்படலாம் எனக் கூறப்படுகிறது.
நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலைமைக்கு சென்றுள்ளது. அரசாங்கத்தின் வருமானத்தை விட செலுத்த வேண்டிய கடன் தொகை அதிகமாகியுள்ளது. இதனால், எதிர்காலத்தில் வரிகள் மீண்டும் கடுமையாக அதிகரிக்கப்படலாம் என்பதுடன் எரிபொருள் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் கடுமையாக அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இப்படியான சூழ்நிலையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் போன்ற போராட்டங்கள் நடைபெறலாம். அவற்றை அடக்க நேரிடும். இதனால், அரசாங்கத்தின் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்படும். இதனை கவனத்தில் கொண்டு அரசாங்கம் முன்கூட்டியே ஆர்ப்பாட்டம் நடத்தும் இடங்களை ஒதுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.



