இலங்கை

பல்கலைக்கழக விரிவுரைகளை இணையவழியில் நடத்துமாறு அறிவுறுத்தல்!

பல்கலைக்கழக விரிவுரைகளை இணையவழியில் (Online) முன்னெடுக்குமாறு அனைத்துத் துணைவேந்தர்களுக்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) அறிவுறுத்தியுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாட்டினால் ஏற்படும் போக்குவரத்துச் சிரமங்களைக் குறைக்கவும், அதேநேரம் கல்வி நடவடிக்கைகள் தடையின்றித் தொடர்வதை உறுதிப்படுத்தவும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துத் தேவையைக் குறைப்பதற்காக விரிவுரைகளை இணையவழி ஊடாக நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில், பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்கள் தற்போது சாத்தியமான இடங்களில் புதன்கிழமைகளில் ‘வீட்டிலிருந்தே பணிபுரிதல்’ (Work from home) முறையைப் பின்பற்றி வருகின்றனர்.

அனைத்துக் கல்வி நடவடிக்கைகளையும் முழுமையாக இணையவழியில் முன்னெடுப்பது தற்போதைக்குச் சாத்தியமில்லை என்பதால், விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் சில நேரடி அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர்.

பல்கலைக்கழக ஊழியர்கள் முடிந்தவரை ஒன்றிணைந்து வாகனங்களைப் பகிர்ந்துகொண்டு (Vehicle pooling) பயணங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அறிவியல், பொறியியல் மற்றும் மருத்துவ பீடங்கள் போன்ற நடைமுறைப் பயிற்சிகள் அவசியமான பாடப்பிரிவுகள் குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் வசந்த லியனகே சில விடயங்களை தெளிவுபடுத்தினார்.

அவையாவன,

கோட்பாட்டு ரீதியான (Theoretical) விரிவுரைகள் இணையவழியில் நடத்தப்படும். நடைமுறைப் பயிற்சிகள் சிறிய குழுக்களாகப் பிரிக்கப்பட்டு நடத்தப்படும்.

உதாரணமாக, ஒரு தொகுதி மாணவர்கள் ஒரு வாரம் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்து தமது செய்முறைப் பயிற்சிகளை முடித்துவிட்டுத் திரும்பலாம்.

தற்போதைய நிலைமை மேலும் மோசமடைந்தால், கொவிட்-19 தொற்று பரவல் காலத்தைப் போலவே மாணவர்கள் வீடுகளிலிருந்தே கற்குமாறு கேட்டுக்கொள்ளப்படலாம். இருப்பினும், இது குறித்த இறுதி தீர்மானம் இன்னும் எட்டப்படவில்லை.

தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் கல்வித் தொடர்ச்சியைப் பேணுவதே எமது முதன்மை நோக்கம் என்றார்.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker