இலங்கையில் கொரோனா தொற்றினால் கர்ப்பிணிப் பெண் மரணம் : குழந்தையை காப்பாற்றிய வைத்தியர்கள்!!

குருணாகலில் கொரோனா தொற்றுக்குள்ளான 28 வயதுடைய கர்ப்பிணி பெண் ஒருவர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கொபெய்கனே பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவர் தனது முதல் குழந்தையை பிரசவிக்க தயாராகியிருந்தார் என தெரியவந்துள்ளது. இந்த பெண் குழந்தையை பிரசவிக்க தயாராகிய நிலையில் நிக்கவரெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டதால் குருணாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குருணாகல் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதன் பின்னர் அவர் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
குழந்தை பெற அவர் தயாராகிய நிலையில் இருந்தமையினால் சத்திரசிகிச்சை ஊடாக குழந்தையை பிரசவிக்க வைத்தியர்கள் தயாராகியுள்ளனர்.
எனினும் கொரோனா தொற்று தீவிரமடைந்ததன் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். எனினும் அவரது குழந்தையை வைத்தியர்கள் காப்பாற்றியுள்ளனர். இதுவரையில் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக குருணாகல் வைத்தியசாலையின் பிரதி இயக்குனர் தெரிவித்துள்ளார்.