இளவரசரின் இறுதிக்கிரியை 17ம் திகதி!- 8 நாட்கள் தேசிய துக்கதினம்


பிரித்தானிய இளவரசர் பிலிப்பின் மறைவையொட்டி உலகத் தலைவர்கள் தங்களது அனுதாபங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அத்தோடு 8 நாட்கள் தேசிய துக்கதினமாக அனுஷ்டிக்கப்பட்டு எதிர்வரும் 17ம் திகதி சனிக்கிழமை வின்சர் கோட்டையிலுள்ள பெர்க்மோர் (frogmore) தோட்டத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிஸபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் தனது 99வது வயதில் உடல் நலக்குறைவால் நேற்று (09.04.2021) காலமானார்.
மறைந்த இளவரசர் பிலிப், 1921ம் ஆண்டு கிரேக்க நாட்டில் பிறந்தார். 1947ம் ஆண்டு இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிஸபெத்தை திருமணம் செய்து கொண்டார்.
சுமார் 65 வருடங்கள் மகாராணிக்கு உதவியாக இருந்த பிலிப், கடந்த 2017ம் ஆண்டு தன்னை பொது வாழ்க்கையில் இருந்து விடுவித்துக் கொண்டார்.
இவர் மகாராணி எலிஸபெத்தின் ஆட்சிக்கு மிகவும் உதவியாக இருந்தார். இங்கிலாந்து அரச குடும்பத்தில் நீண்ட வருடங்கள் இளவரசராக இருந்தவர் பிலிப்.
கடந்த பெப்ரவரி மாதம் 6ம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிலிப்பிற்கு ஏற்கனவே இருந்த இருதய நோய் மற்றும் நோய்தொற்றுக்காக சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், அவர் குணமடைந்து வீடு திரும்பியிருந்த நிலையில் நேற்று காலமானார்.