வன்முறையை தூண்டி வேடிக்கை பார்த்த ட்ரம்பின் பதவி உடனடியாக பறிபோகிறது?

நாடாளுமன்றக் கட்டட தாக்குதல் காரணமாக உலக தலைவர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் சிக்கி தவிக்கும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பதவிக் காலம் நிறைவடைவதற்கு முன்னதாகவே பதவியிலிருந்து நீக்கப்படவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது.
வன்முறையை தூண்டி வேடிக்கை பார்த்ததாக, காரசாரமான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள ட்ரம்ப், இன்னும் 13 நாள்கள் மட்டுமே ஜனாதிபதியாக பணியாற்றுவார் என இருந்த நிலையில், தற்போது மிகவும் மோசமான ஜனாதிபதி என்ற பெயருடன் அரியாணையிலிருந்து அவர் கீழே தள்ளிவிடப்படவுள்ளார்.
ட்ரம்பை பதவியில் இருந்து நீக்க அரசமைப்புச் சட்டத்தில் வழி இருப்பதாகவும், அதை பயன்படுத்த வேண்டும் எனவும் வெர்மான்ட் மாகான குடியரசுக் கட்சி ஆளுநர், தேசிய உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர், என்.ஏ.ஏ.சி.பி. (நேஷனல் அசோசியேஷன் ஃபார் அட்வான்ஸ்மென்ட் ஆஃப் கலர்ட் பீப்புள்) தலைவர் உள்ளிட்டோர் மைக் பென்சை சந்தித்து கோரியுள்ளனர்.
அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட அந்த 25ஆவது திருத்தத்தின் படி, ஜனாதிபதிக்கு அவரது கடமையை ஆற்ற முடியாத நிலை ஏற்பட்டால் அவரது பொறுப்புகள் வேறொருவருக்கு மாற்றப்படலாம்.
1967ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டதில் இருந்து இந்த சட்டத் திருத்தம் ஒரு முறைகூட பயன்படுத்தப்பட்டதில்லை. ஆனால் இப்படியொரு சரித்திர மாற்றம் நிகழுமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.