தற்கொலைதாரியின் சடலத்தை இந்து மயானத்தில் புதைக்குமாறு நான் கூறவில்லை – அரசாங்க அதிபர்

சீயோன் தேவாலய தற்கொலைதாரியின் உடற்பாகங்களை கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைப்பதற்கு நான் நடவடிக்கையெடுத்ததாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவையென மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அவ்வாறான எந்த நடவடிக்கையினையும் தான் எடுக்கவில்லையென்றும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அதிகாரிகளின் மத்தியில் உள்ள முரண்பாடுகளும் வினைத்திறனற்ற செயற்பாடுகளுமே இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதற்கு காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எந்த சந்தர்ப்பத்திலும் குறித்த உடற்பாகங்களை மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் புதைக்க நான் நடவடிக்கையெடுக்கவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.
சீயோன் தேவாலய தற்கொலைதாரியின் உடற்பாகங்கள் கள்ளியங்காடு இந்து மயானத்தில் நேற்று முன்தினம் புதைக்கப்பட்டதாக தெரிவித்து நேற்று மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், மாவட்ட அரசாங்க அதிபரின் அனுமதியுடனே இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.