ஜனாதிபதி கோட்டாவிடம் சலுகைகளை வழங்கக் கோரிய ரணில் – வெளியான முக்கிய தகவல்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கடந்த காலத்தில் பிரதமராக இருந்தபோது வகித்த சலுகைகளை தனக்கு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரியுள்ளதாக உள்வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தக் கோரிக்கையில், சகல வசதிகளையும் கொண்ட கட்டடத் தொகுதி, உத்தியோகபூர்வ இல்லம், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என்பன அடங்கியுள்ளன. அத்தோடு இந்த கோரிக்கை தொடர்பான கடிதம் முன்னாள் பிரதமரால் சில வாரங்களுக்கு முன்பு ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இவற்றினைக் கேட்பதற்கு முன்னாள் பிரதமர்களுக்கு உரிமை இருந்தாலும் ரணிலுக்கு முன்னர் பிரதமராக இருந்த தி.மு.ஜயரத்ன, ரத்னசிறி விக்ரமநாயக்க ஆகியோர் அத்தகைய கோரிக்கையை தற்போதைய ஜனாதிபதியிடம் முன்வைக்கவில்லை.
அத்தோடு ரணில் விக்ரமசிங்கவின் இந்த கடிதத்திற்கு ஜனாதிபதி இன்னும் உத்தியோகப்பூர்வமாக பதிலளிக்கவில்லை என்பதுடன், அமைச்சரவை அங்கீகாரத்திற்காகவும் சமர்ப்பிக்கவில்லை என்பதால் அக்கோரிக்கை நிறைவேற்றப்படுமா என்பது தொடர்பாக சரியான முடிவுகள் வெளியாகவில்லை.
இருப்பினும் கடந்த 2015 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர்களான தி.மு.ஜயரத்ன, ரத்னசிறி விக்ரமநாயக்க ஆகியோருக்கு உத்தியோகப்பூர்வ வீடு, வாகனம் மற்றும் மாதாந்தம் 25,000 ரூபாய் கொடுப்பனவுகளை வழங்க அமைச்சரவை முடிவு செய்திருந்தது.
எவ்வாறாயினும் ரணில் விக்ரமசிங்க மேலதிகமான வரப்பிரசாதங்களுடன் இந்தக் கோரிக்கையினை விடுத்துள்ளமையினால் அவரது கோரிக்கை கிடப்பில் போடப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால் ரணில் விக்ரமசிங்கவின் இந்தக் கோரிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அதனால் கருத்து கூற முடியாதெனவும் அமைச்சரவை இணைப்பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.