இலங்கை

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது இன்றும் விசாரணை!

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று(புதன்கிழமை) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதேவேளை, 20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தில் மேலும் சில திருத்தங்களை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நேற்று ஆரம்பமானது.

இதன்போதே சட்ட மா அதிபர் இதனை அறிவித்தார்.  திருத்தங்கள் அடங்கிய எழுத்து மூலமான பத்திரம் நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அவற்றின் பிரதிகள் மனுதாரர்களுக்கு வழங்கப்பட்டது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, உச்ச நீதிமன்ற நிதியரசர்களான புவனேக அலுவிகார, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் சிசிர த ஆப்ரூ ஆகிய ஐவரடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் மனுக்கள் மீதான விசாரணை இடம்பெற்று வருகிறது.

20ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்ததோடு மனுக்களை தாக்கல் செய்ய ​நேற்றுவரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

20ஆவது திருத்த சட்டநகல் கடந்த 22ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கு எதிராக நீதிமன்றத்தை நாட ஒருவார காலம் அவகாசம் வழங்கப்பட்டதோடு ஒக்டோபர் 12 ற்கு முன்னர் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை அறிவிக்க வேண்டும்.

இந்த நிலையில் வழக்கு விசாரணை நேற்று ஆரம்பமானது. இம் மனுக்களின் பிரதிவாதியாக சட்ட மாஅதிபரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker