வௌிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவருவதில் தொடர்ந்தும் தாமதம்

தொழில் நிமித்தம் வௌிநாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை மேலும் தாமதமடையும் என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
நாட்டின் தற்போதைய நிலைமையினால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கல ரந்தெனிய தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் தொழில்களை இழந்து தங்கியுள்ள இலங்கையர்களுக்கு அந்த நாடுகளின் சட்டத்தின் கீழ் புதிய தொழில்களை பெற்றுக்கொடுப்பது தொடர்பாக ஆராயுமாறு தூதரகங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
புதிய முகவர்களினூடாக அது தொடர்பாக ஆராயுமாறு கோரியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் தொழில்களை இழந்து 20,000இற்கும் அதிகமான இலங்கையர்கள் தங்கியுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கல ரந்தெனிய கூறியுள்ளார்.