கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவது உறுதி – கருணா

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவது உறுதி என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
குறித்த கட்சியின் கலாசார பிரிவின் ஏற்பாட்டில் பொங்கல் விழா மட்டக்களப்பு களுதாவளை ஈஸ்வரன் ஆலய முன்றலில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.
இதையடுத்து, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்துவது குறித்து நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் அனைத்துக் கட்சிக் கூட்டங்களின் போது கலந்துரையாடியதாக தெரிவித்தமை தொடர்பாக ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பில் பல விடயங்கள் உரையாடப்பட்டன. அதிலே கல்முனை விடயம் தொடர்பாக நான் அவரிடம் எடுத்துக் கூறியிருந்தேன்.
அதனைத் தரமுயர்த்தித் தருவதாக மஹிந்த ராஜபக்ஷ வாக்குறுதி அளித்திருந்தார். அவர் அளித்த வாக்குறுதிகளை அனைத்துக் கட்சிகள் மத்தியில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார் .
இந்த விடயம் தொடர்பாக இன்று காலை பொதுநிர்வாக உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனிடம் பிரதமரின் தகவலைக் கொடுத்து அதற்கான வேலைத் திட்டங்களை ஆரம்பிக்குமாறு கேட்டுள்ளேன். எனவே இந்த வேலைத் திட்டங்கள் அனைத்தும் விரைவாக நடைபெறும் என்பதை தெரிவிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.