இலங்கை
புற்று நோய் ஊசி மருந்திலும் ஒரு லட்சம் ரூபாய் தரகு பெற்ற வைத்தியர்கள்-ராஜித

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்
மருந்துகளின் விலைகளை கட்டுப்படுத்துவதற்கு முன்னர் புற்று நோய்க்கான ஊசியை பரிந்துரைக்கும் வைத்தியர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் தரகு பணம் கிடைத்ததாகவும் இதனை தடுத்து நிறுத்தியதாலேயே அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தனக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை காட்டி வருவதாக முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

புற்று நோய்க்கான ஒரு ஊசி மருந்தின் விலை 2 லட்சத்தி 80 ஆயிரம் ரூபாய். ஏன் இந்த மருந்து இவ்வாறு அதிகவிலையில் விற்பனை செய்யப்படுகிறது என்று நான் யோசித்தேன். அவ்விடயம் சம்பந்தமாக தேடிப் பார்க்கும் போது அது மருந்தின் வர்த்தகப் பெயர் மாத்திரமே.
போட்டியில்லாததால் குறித்த மருந்து நிறுவனம் கூறும் விலையையே அரசாங்கம் செலுத்தியது. இதனால், இந்த மருந்துக்கு இணையான மருந்து உலகத்தில் இருக்கிறதா என தேடிப்பார்க்குமாறு நான் தேசிய மருந்துக் கட்டுப்பாட்டு அதிகார சபையிடம் கூறினேன். அவர்கள் அந்த மருந்துகளை முன்வைத்தனர்.
அப்போது டென்டர் கோரும் போது போட்டி ஏற்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட பல்தேசிய கம்பனிகள் மற்றும் ஏனைய நிறுவனங்களுடன் போட்டியிட்டதால் அந்த ஊசி மருந்தின் விலையை 2 லட்சத்து 80 ஆயிரத்திலிருந்து, ஒரு லட்சத்து 65 ஆயிரமாக குறைத்தது. இதனையடுத்து ஒரு ஊசி மருந்தின் விலை ஒரு லட்சத்தி 15 ஆயிரமாக குறைந்தது.
அதுவரையும் அரசாங்கம் பணத்தை மக்களுக்கு செலவிடவில்லை, மருந்து நிறுவனங்களுக்கே செலவிட்டது. மருந்தின் விலை குறைக்கப்பட்டதும் மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் அந்த மருந்து தரமற்றது என்று என்மேல் எதிர்ப்பை ஆரம்பித்தனர்.
5 வருடங்கள் அந்த ஊசி மருந்து பயன்படுத்தப்பட்டது இன்று வரை அந்த மருந்தால் எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. விசேட வைத்திய நிபுணர்களும் இந்த மருந்தில் எந்த தவறும் இல்லை என்று கூறியுள்ளார் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.



