இலங்கை

மிலேனியம் சவால்கள் உடன்படிக்கையில் இலங்கையின் பெயரும் உள்ளடக்கம்!

மிலேனியம் சவால்கள் உடன்படிக்கையில் தொடர்ந்தும் இலங்கை இணைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

வொஷிங்டன் டி.சி.யில் இந்த மாதம் 15 ஆம் திகதி மிலேனியம் சவால்கள் உடன்படிக்கை தொடர்பான கூட்டம் இடம்பெறுவதாக அமெரிக்க தூதரக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த திட்டத்தை வழங்கும் பட்டியலில் இலங்கை இருப்பதாகவும் எவ்வாறாயினும், கூட்டத்தில் எட்டப்படும் முடிவுகள் குறித்து ஊகிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறுபட்ட சர்ச்சைகளுக்கு மத்தியில் எம்.சி.சி. மானியப் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்பட்டதாக முன்னதாக, உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிக்கல, இலங்கை குறித்த திட்டத்தில் இருந்து நீக்கப்படவில்லை என்பதனை உறுதிபடுத்தினார்.

பொருளாதார வளர்ச்சியின் மூலம் வறுமையைக் குறைக்கும் நோக்கில் 480 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்கும் குறித்த ஒப்பந்தத்திற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் எம்.சி.சி.குழு ஒப்புதல் அளித்தது.

இருப்பினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கம் மிலேனியம் சவால்கள் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதை 2019 டிசம்பரில் நிறுத்தி, எம்.சி.சி யை மீளாய்வு செய்ய நான்கு பேர் கொண்ட குழு பிரதமரால் நியமிக்கப்பட்டது.

அதன்படி குறித்த குழு தனது மீளாய்வு அறிக்கையை இந்த ஆண்டு ஜூன் மாதம் பிரதமர் மற்றும் ஜனாதிபதியிடம் ஒப்படைத்தது. இதனை அடுத்து குறித்த அறிக்கை பின்னர் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதேவேளை கடந்த ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ, இலங்கையின் இறையாண்மையை பாதிக்கும் வகையில் மோசமான ஒப்பந்தங்களை எட்டப்போவதில்லை என கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker