எல்.பி.எல்.: குய்ஸ் அஹமட்டின் அபார துடுப்பாட்டத்தின் மூலம் தம்புள்ளை அணியை வீழ்த்தியது கொழும்பு அணி!

லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் 20ஆவது இறுதியுமான லீக் போட்டியில், கொழும்பு கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
ஹம்பாந்தோட்டை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், கொழும்பு கிங்ஸ் அணியும், தம்புள்ளை வைக்கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு கிங்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை வைக்கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 203 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக நிரோஷன் டிக்வெல்ல 65 ஓட்டங்களையும் அஞ்சலோ பெரேரா ஆட்டமிழக்காது 74 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
கொழும்பு அணியின் பந்துவீச்சில், குய்ஸ் அஹமட் 2 விக்கெட்டுகளையும் மத்தியுஸ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 204 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய கொழும்பு கிங்ஸ் அணி, 18.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் கொழும்பு 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, லோரிஸ் எவண்ஸ் 53 ஓட்டங்களுடன் இடைநடுவே வெளியேறினார். குய்ஸ் அஹமட் ஆட்டமிழக்காது 50 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
தம்புள்ளை அணியின் பந்துவீச்சில், சமீத் பட்டேல், மலிந்த புஸ்பகுமார, அன்வர் அலி மற்றும் தசுன் சானக ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 2 விக்கெட்டுகளையும் ஆட்டமிழக்காது 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்ட குய்ஸ் அஹமட் தெரிவுசெய்யப்பட்டார்.