தேர்தலில் வெற்றி பெறச் செய்தால் சீனா மீதான நம்பகத்தன்மையை முடிவுக்கு கொண்டுவருவேன் – ட்ரம்ப்

சீனாவிலிருந்து வந்த கொரோனா வைரஸை நாங்கள் எப்போதும் மறக்க மாட்டோம் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
மேலும் தேர்தலில் என்னை வெற்றி பெறச் செய்தால் சீனா மீதான நம்பகத்தன்மையை முடிவுக்கு கொண்டுவருவேன் என தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது.
கொரோனா வைரஸை சீனா வேண்டுமென்றே உலக நாடுகளுக்கு பரப்பியதாகவும் இந்த விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு சீனாவின் கைப்பாவையாக இருப்பதாகவும் ட்ரம்ப் குற்றம் சாட்டி வருகிறார்.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுக்கும் சீனா கொரோனா வைரஸ் விவகாரத்தில் மிகவும் வெளிப்படையாக நடந்து கொள்வதாகவும் கூறுகிறது.
இந்தநிலையில் அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தின்போது கொரோனா வைரஸ் குறித்து பேசிய ஜனாதிபதி ட்ரம்ப், “சீனாவிலிருந்து வந்த வைரஸை நாங்கள் எப்போதும் மறக்க மாட்டோம். அவர்கள் அதை ஒருபோதும் அனுமதித்திருக்கக் கூடாது.
சீன வைரஸ் நம் நாட்டை தாக்குவதற்கு முன் எனது நிர்வாகம் மிகப்பெரிய பொருளாதாரத்தை உருவாக்கி இருந்தது. அதை நாம் மீண்டும் உருவாக்குவோம்.
தேர்தலில் என்னை வெற்றி பெறச் செய்தால் சீனா மீதான நம்பகத்தன்மையை முடிவுக்கு கொண்டுவருவேன். அடுத்த 4 ஆண்டுகளில் அமெரிக்காவை உலகின் உற்பத்தி வல்லரசாக மாற்றுவேன்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்